Friday, July 31, 2015

செவென் லெவனும் வாணிய செட்டியும் !!!!....




நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற, இருக்கிற வாய்ப்புக்கும் வசதிக்கும் கீழ் வாழ பழகிக்கொண்டாலே நமது பிரச்சினைகள்  தீர்ந்து விடும். நாம் அன்றாடம் காச்சியாய் வாழ்வதற்கும்  அடுத்தவேளைக்கு உணவில்லாமல் இருப்பதற்கும் காரணம்,  நம் சிந்தனை  தெளிவின்மையும்,  சரிவர திட்ட மிடாததும்  தான்.  அடுத்த வேலை கஞ்சிக்கு வழியில்லை என்பவரகள்,  எத்துனை பேர் கிடைக்கின்ற கூலியில் பாதிக்குமேல் மதுக்கடைகளில், பீடி, சிகரட், வெற்றிலை பாக்கு என்று செலவழிக்கிறார்கள்.   பலர் வாழ்கையின்  சவால்களை  எதிர்நோக்க  திராணியற்று வேண்டாமென்று  " மறந்து வாழ  " என்று  சினிமாவையும்   டாஸ்மாக்கையும் தஞ்சம் அடைகிறார்கள்.  இறைவனின் படைப்புகளில் எறும்பு கூட மழை காலத்திற்காக  சேமிக்கிறது,  வசந்த காலத்தில்  பூத்து சிரிக்கும்  மலர்களில் இருந்து மதுவை திரட்டி தம் " பஞ்ச " காலத்திற்காக சேர்க்கிறது  தேனீ.   அழகிய உருவில், செம்மையான அறிவுடன் படைக்கப்பட்ட மனிதன் ஏன் இப்படி இருக்கிறான் ?.  சிந்திக்க வேண்டாமா ?

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருகிறது,   தாக மெடுத்த நாய் நக்கித்தான் " மில்லி லிட்டர் " அளவில்  குடிக்கிறது,  யாரும் நாயிடம் வாய் வைத்து குடிக்கூடாது என்று சொன்னார்களா?.......   தேவையானால்  யானை தும்பிக்கையால்  உறிஞ்சி "லிட்டர் கணக்கில் "  தன்மேல் அருவியென பீய்ச்சிகொள்கிறது,  விவரமான  மனிதன் வண்டிகளிலோ,  லாரிகளிலோ, டேங்கர்களிலோ  அள்ளிக்கொண்டு போய்  பல்வேறு தேவைகளுக்கு  உபயோகித்து கொள்கிறான்,  பணம்  பண்ணுகிறான்.  யாரும்  யாரையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்களா ?

சிலர் வியாபாரம் செய்து கூட ஒன்றும் செய்ய இயவில்லை, வாழ்கையை ஓட்டுவதே சிரமமாக இருக்கிறது என  புலம்புகிறார்கள்,  சைக்கிளில்   மழை காலத்தில்   உப்பு வியாபாரம்  செய்தால் என்னவாகும் ?,   வெயில் காலமாகவே இருந்தாலும் கூட,   ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் எவ்வளவு தான் உப்பை உபயோகிப்பார்கள் ?.  மாற்றி சிந்திக்க வேண்டும்.   பாஷையும் தெரியாமல்,  வட  நாட்டில் இருந்து வந்து,  புடவைகள்,  நைட்டிகள்  போன்றவற்றை  தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் தலையில் சுமந்து வியாபாரம் செய்கிறார்களே ?  கண்டதில்லையாபழைய கிழிந்த பட்டுபுடவைகளுக்கும்,  பழைய தேக்கு மர சாமான்களுக்கும் பணம் தருவதாக ஊரெல்லாம் வலம் வருகிறார்களே ?.  காலம் காலமாய் பழைய கொலுசை வாங்கிக்கொண்டு புது கொலுசு தருவார்களே?  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  இவர்களெல்லாம்  நாளும் நம்மிடையே தானே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.  யாரும் இவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வில்லை,   நம் நிலைமைக்கு நாம் தான் பொறுப்பு என்ற புரிதல், கற்பனை, உழைக்க அஞ்சாமை .   நமக்கு பசித்தால் நாம் தான் சாப்பிட வேண்டும், நம்மை தன்னுள்ளே சுமந்து,  உண்பதையும்,  உண்டு உடலில்  ஊறியதையும் நம்மிடம் பகிர்ந்து, நம்மை இவ்வுலகில் பெற்று விட்ட தாய்  சாப்பிட்டால் கூட நம் பசி தீராது  அவரவர் சாப்பிட வேண்டும்.

நம்முடைய நிலைமை எதுவாக இருந்தாலும் அவைகள்   நம்  கரங்கள் தேடிக்கொண்டவைகள் தான்.  பறவையை கண்டு பறந்திட நினைத்தவன் பறக்கிறான்,   ஆழ  கடலில்  சஞ்சாரம் செய்யநினைத்தவன்  நீர் மூழ்கி கப்பலை கண்டான், விண்மீன்களை கண்டு வியந்தவன்,   அண்டத்தை  துலாவி, இன்னுமோர் உலகம் உண்டென நிறுவிட  சுவடுகள் தேடி  பயணித்துக்கொண்டே இருக்கிறான். இது மட்டுமா ?  நம் கரங்களில், நம்மை சுற்றிலும், உலகை சுருக்கி, வசதியை பெருக்க  வந்திருக்கும்  எண்ணற்ற, மின்னணு சாதனங்கள். அவைகளை உருவாக்கிய  மனிதர்கள் என்ன சிறப்பு படைப்புக்களா ?.  நம்மை போன்றவர்கள் தானே.  யாரும் அவர்களுக்கு,  அடிப்படை தேவைகளுக்கு உதவினார்கள், கொடுத்தார்கள் என்று தயவு செய்து நினைக்காதீர்கள்.  உலகம் முழுதும்  மனிதர்கள்  ஒரே மாதரி தான்,  நீங்கள் நன்றாய் இருந்தாலும், எக்கேடு கெட்டு போனாலும்  எனக்கென்ன ?,  என்ற  மனப்பான்மை தான் அகில உலகத்திலும்   பின் அவர்களுக்கான உந்து சக்தி?   மாற்று சிந்தனை, கற்பனை, வசதியாக வாழ ஆசை.  நமக்கு  சோற்றுக்கு  சிந்திக்கவே  சோம்பல்,   வசதியாய் வாழ நினைக்க சுயநினைவேது ?.

வழமையான  வருமானத்துடன், அனாயசமாக கூடுதல் வருமானம் தேடும் அன்றாடம் காய்ச்சிகளை  கண்டிருக்கிறீர்களா,   சேலம்  பகுதியை சேர்ந்த பழங்குடிமக்கள்,  தமிழ் நாட்டிலே  பரவலாக பரவி, பெரும்பாலும் கட்டுமான துறையிலே கூலிவேலை செய்கிறார்கள்.  தினசரி  8 மணி நேர வேலைக்கு, ரூ 600, ரூ 700 வாங்குகிறார்கள்.  ஆங்காங்கே வேலை செய்யும் கட்டிடங்களிலேயே குடும்பத்துடன் தங்கிக்கொண்டு  வேலை செய்கிறார்கள்.  இரவு  மட்டும் சமைப்பார்கள். நிறைய  சோறு ஆக்கி இரவும் உண்டுவிட்டு,  மீதியை நீரூற்றி மறுநாள் பகலிலும் உண்பார்கள்.  அவர்கள் வேலை செய்யும்  கட்டிடங்களுக்கு சாமான்கள் வரும் போது,  முழு லோடு  கல்லோ, மணலோ  எதுவானாலும்  சரி. கான்ட்ராக்ட்  முறையில்  லோடுக்கு ரூ 1500. 2000 என்று பேசிக்கொண்டு,   6 மணிக்கு மேல் , ஒரே குடும்பத்தை சேர்ந்த 2, 3 பேர் சேர்ந்து,  1 மணி ,2 மணி நேரத்துக்குள்  இறக்கி முடித்து விடுவார்கள்.  இதுவும் உபரி வருமானம்  தான்.


இன்னும்  சிலர் வானம் பார்த்த பூமி, அதிகம் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள், சென்னை போன்ற பெரு நகரங்களில் கட்டிட வேலை செய்கிறார்கள்,  இவர்களுக்கு  கூலி கூடுதல்.  இவர்களும்  மேற்கண்ட முறைகளில் கூடுதல் வருமானம் தேடிக்கொள்கிறார்கள்.  அவரவர் ஊர்களில், வசதியான  வீடுகள், நிலன் புலன்கள் இருக்கிறது.  விவசாய நேரங்களில்  அவரவர் ஊர்களில் பெண்கள் மட்டும் தங்கி விவசாய வேலைகளை பார்க்கிறார்கள்,  ஆண்கள்  அவர்களுடைய தேவை அங்கு வருமட்டும்  நகரங்களில் வேலை பார்ப்பார்கள் .  நம்  " வெள்ளை சட்டை " முதலாளிகள்,  நாளை கூடுதலாக  வேலை  வாங்கிக்கொள்ளலாம் என்ற நினைப்பில் " போனசாக " குடிக்க  வாங்கி கொடுத்து " குடி" கெடுக்கிறார்கள். 
  
வாழ்கையில் முன்னேற என்ற எண்ணம் வேண்டும்,  மனமிருந்தால்  மார்க்க முண்டு.

வேலை இல்லை, வேலை இல்லை என்று  புலம்பி திரிபவர்களுக்கு,  படிப்பில்லை என்பவர்களுக்கு,  உள்நாட்டில் வாய்ப்புக்கள் இல்லை என்போருக்கு, தேடலுடன் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களை கவனித்தாலே  போதும்,  கொட்டிக்கிடக்கும் வாய்ப்புக்கள்  தெரியும்.   தொழில் செய்பவர்களுக்கே  முன்னேற்ற பாதை  எளிதாய் அமையும்.   படிப்பு என்பது  நமது சிந்தனையை  செம்மையாக்கி தரும் ஒரு சாதனம் தானே தவிர,  தொழில் செய்ய  தேவையே இல்லை, அது  இருந்தால் தான்  முடியும் என்பதில்லை.


நமதூர் வாணியசெட்டியார்களை  கவனித்திருக்கிறீர்களா ?,  நாலுமுழ வேட்டி, கதர் அரை கை சட்டை,  ஒரு துண்டு  இவை மட்டும் தான் தான். வாரச் சந்தைகளிலும், வியாபாரத்திற்க்காக மக்கள் கூடு மிடங்களிலும்  இவர்கள் எண்ணை  வியாபாரம் செய்வார்கள். சந்தைக்கு வரும் போது துண்டால் சும்மாடு கட்டி,  பித்தளை பாத்திரங்களில்  எண்ணையை தலையில் சுமந்து வருவார்கள்.  அத்துடன்  ரூ 1000, ரூ 2000 இக்கு சில்லறை மாற்றி வைத்திருப்பார்கள்.  சிறு சிறு வியாபாரிகள் தங்களிடம் சாமான் வாங்குபவர்களிடம்,    20,  50,  போன்ற பெரிய  நோட்டிற்கு, சில்லறை இருக்காது,  அவர்கள்  தங்கள் வாடிக்கையாளர்களை, செட்டிமார்களிடம் சென்று, சில்லறை பெற்று கொள்ளுமாறு சொல்லி அனுப்புவார்கள்.  ஒரு ருபாய்க்கு சில்லறை வேண்டும் என்றால்  95 பைசா தான் கொடுப்பார்.  அதாவது  5%கமிசன் ,  இன்னும் பொடி சில்லறை வேண்டும் என்றால்  ரூபாய்க்கு 10 பைசா அதாவது 10%கமிசன் இது நாம் நம்முடைய வசதிக்காக, அவசரத்திற்காக கணக்கு பார்க்காமல் செலவு செய்வது,  சாதரணமாக ஒரு ஏரியாவில்  ஒரு வாரத்தில்  இரண்டு அல்லது மூன்று சந்தை  நடக்கும்.  ரூ 1000 த்தை வைத்து ஒரு சந்தையில்   ரூபாய் 50  லிருந்து  100  வரை கமிஷன்  பார்த்து விடுவார்.  ஒரு மாதத்தில் 200 லிருந்து  400 வரை கிடைப்பதாக  கொண்டால் .  2 லிருந்து 5  மாதத்திற்குள், புரட்டிய  ரூ 1000 த்தை,  இரண்டு மடங்காக்கி விடுவார். இந்த கூடுதல் வருமானம்,  எந்தவிதமான கூடுதல் உழைப்போ,  பிரயாசையோ,  இன்றி.......,  இதற்கு என்ன தேவை  என்று நீங்களே தீர்மானித்து  கொள்ளுங்கள்.  எண்ணை வியாபாரத்தில் இருந்து வருவது தனி. வங்கிகளில் இதே தொகையை  போட்டால் இரண்டு மடங்காக  ஐந்தரை ஆண்டுகளாகும். இதை தான் வொர்க் ஸ்மார்ட் என்கிறார்களோ !!!!!!!  செட்டி பிள்ளை கெட்டி பிள்ளைதான் போங்கோ !!!!!

இதே சித்தாந்தத்தின்  அடிப்படையிலேயே தான் மேல் நாடுகளில், கண்வினியன்ஸ்  ஸ்டோர்  என்பதாக சொல்லி திறந்திருக்கிறார்கள், இவைகள் 24 மணிநேரமும்  365 நாட்களும் திறந்திருக்கும், இவற்றில் இல்லாத  பொருள் என்பதே  இருக்காது ,  ஆனால் சாதாரண கடைகளில் கிடைப்பதை விட 25% லிருந்து 50% வரை விலை கூடுதலாக இருக்கும். சிங்கப்பூர்  சென்றவர்கள்  7 -11 ஸ்டோர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், அது  இவ்வகை கடை தான்.

இதுவரை நான் கதைத்தேன்.  இனி நீங்கள் சொல்லுங்கள்,  நம்முடைய் நிலைமைக்கு யார் காரணம,  நம்மால் முடியாதா ?.  வேலையில்லை என்பது நொண்டிசாக்கா ?   சிந்திப்போம்  சகோதரர்களே!!!!!  நம்மாலும்  முடியும்  சாதிப்போம்.
 

Thursday, July 30, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் - தொடர் 7

பகுத்தறிவை முன் வைத்து பணத்தறிவை பெருக்குவோம் !!!!!!.....

செல்வம் சேர்க்க  வேண்டும் என்ற குறிக்கோளுடன்  அதற்கான   வழி முறைகள் என்னவெல்லாம் என்று பார்க்க தொடங்கி  இருக்கிற  நாம்,  முடிந்த  அளவிற்கு தீர சிந்தித்து,  முறையான கட்டுப்பாடான வகையில் செயலாற்ற நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் நமக்குள்   வளர்த்து கொள்கிற ஒழுங்கு முறை தான், நாம் இலக்கை அடைவதை தீர்மானிக்க கூடியதாய் இருக்கும். நம்மில் பெரும்பாலோர்   வீட்டு வாடகை,  செல்போன்  பில், வண்டி டியூ  போன்றவற்றை  சரியான                நேரத்தில் , தலையை அடகு வைத்தாவது  கட்டிவிடுகிறோம் . கட்டவில்லையென்றால் என்ன நடக்குமென்று தெரியும், ஆனால் ஒவ்வொரு முறையும் கட்டாவிட்டால் வரும் விளைவுகளை யோசித்து செய்வதில்லை, அனிச்சையாக செய்கிறோம்.  நம் கையை விட்டு போன இந்த தொகைகள் களால் நமக்கு கிடைக்கும் " சேவைகளுடன் " அவற்றின் உபயோகம் முடிந்து விட்டது, நாம் அதைப்பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது, பார்ப்பதும் இல்லை.  நீங்கள் உங்களுடைய பொருளாதார இலக்கை அடைய வேண்டும் என்றால், உங்களுடைய  சேமிப்பையும் முதலீட்டையும் பற்றி,  இவை நம்முடையவை அல்ல,  என்பது போன்ற பற்றற்ற துறவு  மனப்பான்மையை உருவாக்கி கொள்ள வேண்டும். மேற்கோள் காட்டிய மேற்படி செலவுகள் பற்றி எப்படி மாதம் ஒருமுறை நினைவு கொள்கிறோமோ அப்படி,  3 மாத , 6 மாத இடைவெளிகளில், நம் முதலீட்டின்  ஆரோக்கிய நிலைமைகளை பரிசீலித்து, அதற்கு தக மாற்றங்கள் செய்யவேண்டி இருந்தால் செய்து கொள்ள வேண்டுமே தவிர ,  மற்றபடி அவைகளை மறந்து விட வேண்டும்.

எல்லாவற்றிக்கும் ஒரு விலையுண்டு,  இலவசம் என்பதே கிடையாது.  நாளைய  ஓய்வுகாலத்தில்  யாருக்கும்  பாரமாக இல்லாமல் இருக்கவும், நம் பொறுப்புக்களை  இலகுவான முறையில் நிறைவேற்றவும்,  இப்பொழுதில் இருந்தே நம்மை தயாராக்கி கொள்ளவும், இன்று கடை பிடிக்கின்ற சிக்கனமும், கூடுதல் வருமானத்திற்கு செய்கின்ற உழைப்பும், மனத்தால் கடைபிடிக்கின்ற  உறுதிப்பாடுகளும் தான் நாம் கொடுக்கும் விலை அரசாங்கம்  இலவசமாக  கொடுக்கிறதே என்கிறீர்களா ?. இலவசத்தின் இலட்சணத்தை பாருங்கள்.   நம்மில் சிலருக்கு  கொடுக்கப்பட்ட இலவசத்தின்  விலையை,  நம்  எல்லோரிடம் இருந்தும் ,   பீடி,  சிகரட் ,சர்கரை, வெல்லம்,தேயிலை என்று  அன்றாடம் நம் வாழ்விற்கு அத்தியாவசியமான  எல்லா பொருள்களின் மூலமாகவும், இன்னும்  இவை போன்ற பல நூறு பொருட்கள்  வழியாகவும்,   நாம்  அறியாமல் நம்மிடம் இருந்து, பல பெயர்களில் வரியாக,  சிறுக சிறுக வசூல் செய்யப்படுகிறது.  இதனால் தான் விலைவாசி கூடுகிறது.   இவைகளை  பற்றியெல்லாம்  நாம் சிந்தித்து விடக்கூடாது  என்பதற்காக தான்,  பட்டி தொட்டியெல்லாம்  "  டாஸ்மாக் தீர்த்த  தலங்கள்  "   மேலும் போதைக்கு வலுசேர்க்க உறவு  சொல்லி, சொல்லி தாலாட்ட சொற்சிலம்ப மேடைகள்.

நிதி  நிறுவனங்கள், வங்கிகள்  எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் ?  நம்மிடம் இருந்து குறைந்த வட்டிக்கு வாங்கி,  மற்றோருக்கும் தொழில்களுக்கும் வியாபாரிகளுக்கும்  அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, லாபமீட்டுகிறார்கள்.

தொழிலதிபர்களும், வியாபாரிகளும்  எந்த அளவிற்கு வட்டி கொடுத்தால், தங்களால் வட்டியும்  கொடுத்து , மேற்படியாக லாபமும் பார்த்து  கண்ணியமான முறையில் தொழில் நடத்த முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  இதனால் தான் வட்டி விகிதம் கூடும்போது  தொழில் துறை பாதிக்கப்படுகிறது, தொழில் வளர்ச்சி இருப்பதில்லை. அறக்க பறக்க பாடுபட்டு  தொழில் செய்து லாபமில்லாமல் இருப்பதற்கு,  இருக்கும் அளவிலேயே இருந்து கொள்ளலாம் என்று இருந்து விடுகிறார்கள். இந்த அளவை ரிசர்வு வங்கி நெறிப்படுத்துகிறது,  இது  9% இல் இருந்து 12% இக்கு இடையில் இருக்கும்.   இப்படி சாதக பாதக விளைவுகளை சீர்தூக்கி பார்க்கும்  அடிப்படை பொருளாதார அறிவு , நம்மை போன்ற கீழ்தட்டு மக்களுக்கு இல்லை.

அதனால் தான் யாரும் ரூ 10,000 முதலீடு செய்யுங்கள், மாதம் ரூ 500, ரூ 1000 தருகிறோம், ஒருவருடம் கழித்து முழு முதல்  ரூ 10000  திருப்பி தருகிறோம்  என்று சொன்னால்,  நம்பி  முதலீடு செய்ய தயாராய் இருக்கிறோம். எத்துனை பேர் பெரிய தேவைகளுக்கென்று சேர்த்து வைத்திருந்த  பணத்தை  அள்ளிக்கொடுத்து விட்டு,  அலையாய்  அலைந்து கொண்டிருக்கிறோம்.  மோசடி செய்தவன்,  சொகுசாக  பாதுகாப்புடன்  உள்ளே இருந்துவிட்டு  சிற்சில வருடங்களில் வெளியே வரப்போகிறான்.  முதல் இழந்தவர்களை .பற்றி கவலை படுபவர் யார் ?......   நாம் தான்   யோசிக்க வேண்டும்,  எப்படி யாராலும்   நடைமுறை  யில்   சாத்தியமில்லாத அளவில் லாபம் தர முடியும்?.   தருகிறேன் என்றால் முதலுக்கே மோசம் என்று நினைத்து கொள்ளுங்கள்.  ஒப்பீட்டிற்கு வங்கிகளில், பெரிய கார்பொரேட் கம்பனிகளில் டெபாசிட்டுக்கு  எத்தனை சதவீத வட்டி கொடுக்கிறார்கள் என்று பார்த்தால் நிலவரம் தெரிந்து கொள்ளலாம்.          

மோசடி பேர்வழிகள்  எந்தெந்த வகைகளில் எல்லாம்   திட்டமிட்டு வருவார்கள் என்று நம்மால் கற்பனைகூட  செய்ய முடியாது .  தேக்கு மர திட்டம், தென்னை மர திட்டம், கீமு கோழி.....  இன்னும் எத்தனை எத்தனையோ. கோவையில் விவசாய பல்கலைகழகம்  இருந்தும்,  கீமு கோழி  பற்றி முன்பே எச்சரிக்கை  செய்யவில்லை  என்று சொல்வோரும் உண்டு .  மற்றவர்களை  குறை சொல்வதை விட, நம் செயல்களுக்கும், பணத்திற்கும் நாமே தான் பொறுப்பு என்ற புரிதல் மனப்பான்மை வர வேண்டும்.  எல்லாம் சரியாகி விடும்.

கடன் பத்திரங்களிலே முதலீடு செய்ய நினைப்பவர்கள,     தமக்கு  நன்கு அறிமுகமான கார்பொரட் கம்பனிகள்  வெளியிடும் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.  கன்வர்டிப்ல் பத்திரங்கள் இன்னும் நல்லது.  அரசாங்கம்  சம்பந்தப்பட்ட,  அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களை  தவிர்ப்பது  நல்லது. கம்பனிகாரர்கள்  வெளியிடும், பத்திரம் சம்மந்தப்பட்ட விவர புத்தகத்தை படித்து புரிந்து கொள்ளவேண்டும். விளம்பரம் வரும் பத்திரிகை  களிலோ, பெரிய பத்திரிகைகளின் வர்த்தக பகுதியிலோ அது பற்றி பேசப்படும் அல்லது எழுதப்படும்.  இவ்விவரங்களை எல்லாம்  உணவுடன்  தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போன்று உபயோகிக்க மனதை பக்குவ படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவருடைய  அபிப்பிராயத்தை மட்டும் படித்து முடிவு செய்யாமல், மாற்றமான  அபிப்பிராயங்களையும்  அலசி, நீங்களே முடிவு எடுக்க வேண்டும்.  நிதி ஆலோசகர்கள்,  நிதி சம்மந்தமான  கட்டுரைகள் எழுதுவோர் எல்லாம் கூலிக்கு மாரடிப்போரே  என்பதை மனதில் கொள்ளுங்கள்,   இவர்களுக்கு கம்பனிகள் பணம் கொடுத்து சாதகமாக எழுதசொல்வது உண்டு.   இந்த உலகத்தில் உங்கள் நலனையும், பணத்தின் பாதுகாப்பை யும்   பற்றி கவலைப்படுவது  உங்களை தவிர வேறு யாராகவும்  இருக்கமுடியாது.  இதனை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.

நாட்டில் நீதி நேர்மை என்பதெல்லாம் இல்லை, ஒருசில  இடங்களில் நோய் படுக்கையில் படுத்து டிரிப் ஏற்றிக்கொண்டிருக்கிறது.  பணம் இருந்தால்  எதனையும்  சாதித்து   விடலாம்   என்ற  நிலை இருக்கிறது. உங்களுடைய  பொருளாதாரத்தையோ, பொருளாதார விஷயங்களையோ, கூடியவரை  யாருடனும் விவாதிக்காமல்  இருப்பது நல்லது.  முதலீடு  சம்மந்தமான ஆலோசனைகளுக்கு  " மகோஉபாத்தியாய "  கூகிள்  இருக்கிறார்.  எந்த விசயமாக இருந்தாலும் கூகிள்லில்  பதில் கிடைக்கும்.   வங்கிகளில் வேலை செய்வோர்,  கல்லூரி படிப்பு படித்தோர் என்று எண்ணி யோசனை  கேட்காதீர்கள்,  நீங்கள் கேட்கும் விஷயம் பற்றி தெரியாவிட்டாலும்,  எனக்கு தெரியாது என்று சொல்லாமல் தவறான தகவல் தந்து திசை திருப்பி விட கூடும்.  எனக்கு தெரியாது, அல்லது  தெரிந்தவர்களிடம் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லும்  பக்குவப்பட்ட மனிதர்கள் மிகவும் குறைவு.  எனக்கு  ஓரளவுக்கு தெரிந்த  விஷயத்தை,  இறை அச்சத்தால் உறுதி படுத்தி கொள்ள வேண்டி மார்க்க கல்வி பெற்று சிலகாலமான  ஒரு சகோதரரிடம் கேட்ட போது, " கூடாது ", என்று சொல்லி விட்டார்,  நான் என்ன விஷயம் பற்றி பேசுகிறேன் என்று தெரிகிறதா ?,  என்று கேட்ட போது,  ஷேர்  என்றால் என்ன என்று கேட்டடார்.   ஆகவே யாரிடம் கேட்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். கணினி இல்லாதவர்களுக்கு போன்  இருக்கவே இருக்கிறது.  ஒரு  சிறிய கட்டணத்திற்கு பிரவுசிங் சென்டர்களிலும் ,  குறிப்பிட்ட  சில நூலகங்களில்  கட்டணமின்றி  கணினி உபயோகித்து கொள்ளலாம்.

இன்றைய கால கட்டத்தில் மிக அதிகமாக மோசடி நடக்க கூடிய தொழிலாக  ரியல் எஸ்டேட் தான் இருக்கிறது.  அவரவர் ஊர்களிலேயே  பார்த்து வாங்குவது தான் சாலச்சிறந்தது. மனையாக வாங்குவதை விட வீடாக வாங்குவது சிறந்தது.  பெரு நகரங்களில், நமது பட்ஜெட்டுக்குள்  கிடைக்க வில்லை என்பதற்காக  பெருநகரை சுற்றியுள்ள ஊர்களில் வாங்கி ஏமாந்தவர்கள் இருக்கிறார்கள்.  ஒரே மனையை பலருக்கும் பத்திரம்  முடித்து கொடுத்த  நிகழ்சிகளும் நடந்திருக்கின்றன. இம்மாதிரியான  நிகழ்சிகளின்  அடிப்படையில் ஒன்றிரண்டு  திரைப்படங்கள் கூட வந்ததாக ஞாபகம்.

எனக்கு நேரிடையாக தெரிந்த ஒரு நிகழ்ச்சி,  அவர் ஒரு அரசு அலுவளர் ,   அலுவலகத்தில்  வேலை பார்த்த எல்லோரும் சேர்ந்து,  ( 40 ,50 பேர் )  ஒரே இடத்தில் மனையை வாங்கி,  சம்மந்தப்பட்ட  அலுவலக ஊழியர்  காலனி என்பதாக பெயரும் வைத்தார்கள்,  ஒவ்வொருவராக  வீடுகள் கட்டினார்கள்.  ஒரு சில வீடுகளே கட்டப்பட  வேண்டிய நிலையில் இருக்கும் போது,  வீடுகளுக்கு செல்லும் பொது வழியை விற்றவர் அடைத்து விட்டார், அது பற்றி  அவரிடம்  கேட்ட  போது  உங்களுக்கு  மனையை மட்டும் தான் கிரயம்செய்து தந்திருக்கிறேன்,  பொது வழிக்கு என்று உள்ள இடத்தை நான் விற்கவே இல்லை என்று சொல்லிவிட்டார். பத்திரத்திலும் அப்படியே இருந்தது,   இத்தனைக்கும்   லேயவுட் போட்டு,  பாதைக்கு இடம் விட்டு இருப்பதாக  காட்டப்பட்ட  இடம் தான். அப்ரூவல் வாங்கவில்லை.   பெரும் போராட்டத்திற்கு பிறகு,  ஏற்கனவே  சதுர அடிக்கு கொடுத்த  விலையை விட கூடுதலாக கொடுத்து  கிரயம் செய்து  வாங்கினார்கள். எல்லோருமே படித்து  அரசு  வேலையில்  இருந்தவர்கள் தான் !!!. இதே போல் சென்னை  நகருக்குள்ளேயே  1980, 1985 களில் என்று ஞாபகம் ,  அரசு வங்கி ஊழியர்கள் சேர்ந்து  2400 சதுர அடி மனை  ரூ 25 லட்சத்துக்கு வாங்கி, 10,15 லட்சம் செலவு செய்து வீடு கட்டினார்கள். இன்று அம்மனையும் வீடும்  85,90 லட்சம்  அளவிலேயே  மதிக்கப்படுகிறது,  இதே தொகையை வேறு வகையில் முதலீடு செய்திருந்தாலோ,   வேறு ஏரியாவில்  இருந்திருந்தாலோ,  25,30 வருட காலத்தில் எத்தனையோ மடங்கு விலை கூடி இருக்கும்.   ஆகவே  எவ்விடத்தில், யாரிடம்  வாங்குகிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். நல்ல விவரம் அறிந்தவர்களிடம் ஆலோசனை செய்து   வாங்குவது நல்லது.  பெரிய ட்ரான்ஸாக்சன் என்றால் , செலவை பார்க்காமல்  வக்கீல் வழியாக செய்வது நல்லது.

அதிகமாக வெளிநாடுகளில் வேலை பார்ப்போர் உள்ள ஊர்களில் எங்கள் ஊரும் ஒன்று. பக்கத்து பெரிய நகரில்,  பின்னால் விலை கூடியதும்  விற்கலாம் என்ற எண்ணத்தில் பலர் வீடுகள் வாங்கி போட்டனர், விலையும்  தாறு மாறாக ஏறியது, இன்று எல்லோரும் விற்க நினைக்கிறார்கள், யாராலும் விற்க முடியவில்லை,  முதலீடு  அப்படியே தேங்கி  நிற்கிறது,  விலை குறைத்து கொடுக்கவும் யாரும் தயாராக  இல்லை. இம்மாதிரியான விசயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலீட்டு வகைகளில்  உடனடியாக நம் தேவைக்கு விற்க முடியாத வகையில்  ரியல் எஸ்டேட் தான் இருக்கிறது ஆகையால் நிரந்தரமான முதலீட்டிற்காக மட்டுமே செய்வது சிறந்தது.

விற்று லாபம் பார்க்கவேண்டும், அதே நேரத்தில் பாதுகாப்பாகவும்  இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தம்முடன், வாங்க நினைக்கும் சொத்தின் மதிப்பிற்கு ஏற்ப,  4,5 பேரோ, 10 பேரோ சேர்ந்து வருமானம் வரக்கூடிய நகருக்குள் இருக்கிற  கட்டிடத்தில் முதலீடு செய்வதை பற்றி யோசிக்கலாம். வைத்திருக்கும்  காலம் வரை உபரி  வருமானமும் வரும், விற்கும் போது  கணிசமான லாபம் கிடைக்கவும் வாய்ப்பு  உண்டு.

அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்க நினைக்காதீர்கள், பட்டப்பகலில், உங்களை எமாற்றப்போகிறேன் என்று சொல்லியே ஏமாற்றும் வேலை, முழு விவரத்தையும் எழுதினால், இப்பதிவு மிக மிக நீளமானதாகி  விடும். இவ்வகையான முதலீட்டை  தவிர்ந்து  கொள்ளுங்கள் என்பதே போது மானதாய்  இருக்கும்.

அடுத்த பதிவில் இறைவன் நாடினால், இதுவரை பார்த்த எல்லாவற்றையும் விட கூடுதல் வருமானம் தரக்கூடியது என்று  புள்ளி விவரங்களுடன் நிறுவப்பட்டுள்ள பங்கு முதலீட்டை பற்றி பார்க்க தொடங்குவோம் ........

உபரி வருமானம்

Tuesday, July 28, 2015

சொல்லுங்களேன் அய்யா........ . நான்தான் கிறுக்கனா ???????

வெகு  நாளாக எனக்குள்  ஒரு பெரும் கேள்வி,  இது எனக்கு மட்டுமா,  இல்லை பலரும் இப்படித்தான் உள்ளுக்குள் நினைக்கிறார்களா ?......  மண்டை கனம்  பிடித்தவன் என்று நினைத்து கொள்வார்களோ ?......  இப்பத்தான் ரெண்டெழுத்து எழுத ஆரம்பிச்சிருக்கிறான்,   அதுக்குள்ளயே  இப்படின்னா.?.... யாரிடம் கேட்பது என்று  ஒரு மினி குருஷேத்ரம்.

பிறகுதான் நினைவு வந்தது,  நான்  என்ன  பெரிய  பிளாக்கரா ?,  நானேதான்   தான் என்  பிளக்கை  ஒரு நாளைக்கு மூணு தரம்  யாரும் படிக்கிறாங்களா? என்று பார்க்கிறேன் ,  அப்படி வேறு யாரும் தப்பி தவறி வந்து விட்டாலும் ,  முகத்துக்கு  நேராவா  இருக்கிறோம் என்று தைரியபடுத்திக்கொண்டு  எழுத தொடங்கினாலும் கொஞ்ச வெடவெடன்னுதான்  இருக்கிறது,  நேரடியா சொல்லாம  கொஞ்சம் அதை இதை  சைட் டிஸ்சா  சொல்லி ஆசுவாச படுத்திகிட்டு, மெயின் கோர்சுக்கு  வருகிறேன்.

எங்க அப்பாவிற்கு என்னை எப்படியாவது நல்லா படிக்க வச்சுடனும்னு  ரெம்ப ஆசை ( பாவங்க எங்க அப்பா !!! ),  பத்தாவது படிச்ச உடனேயே,  பாலிடெக்னிக்லெ  சேர்ந்து படிக்கிறேன் என்றதுக்கு,  எங்க அம்மா கிட்ட போய்,    எம் புள்ளைய நான்  காக்கி சட்டை போட்டு பாக்கனும்னு ஆசை படலே,  கோட்டு  சூட் போடற  பெரிய ஆபீசரா  பாக்கனும்  என்று கறாரா  சொல்லிட்டாருங்க         ( பாவங்க எங்க அப்பா !!!! )  ரெண்டுக்குமே  கொடுப்பினை இல்லைங்க.

எங்கப்பா  ஆளினால்  அழகு ராஜா  மாதிரி,  அதிலே ஒரு கேரக்டர்   கவிஞர்,  ஆனா  என்கிட்ட எல்லாம் சொன்னது இல்லை.  (எங்க அப்பா தவறிப்போன பிறகு,  வீட்டை சுத்தம்  பண்ணும் போது,   ஒரு பொட்டி  நிறைய  பாட்டு எழுதின நோட்டு  இருந்திச்சு,    அது  என்னான்னு கேட்டப்ப  தான்  எங்கம்மா சொன்னாங்க).   அந்த நேரத்திலேதான்  ராணிமுத்து,  ஒரு ரூபாய்க்கு மாதம் ஒரு நாவல் விற்க தொடங்கினார்கள்.  மாதாமாதம்  வாங்கி வந்து தருவார்.  மூணாவது  மாசம் ஒரு சிக்கல் வந்திருச்சு,   நான்  அப்பதான்  ஆரம்ப பள்ளியில் ஆறாவது முடித்து,  உயர்நிலை பள்ளியில் சேர்ந்து  ஓராண்டு படித்து  முடித்து  எட்டாவது போய்கொண்டிருந்தேன்,   என் ஆரம்ப பள்ளி ஆசிரியை,  எங்கள் வீட்டு  அருகிலேயே குடியிருந்தார், அவர்  என்னிடம்  ராணிமுத்தை  படிக்க கேட்டார்,  நான் அவருக்கு கொடுக்க வேண்டியிருக்குமே என்று ஓடி  ஒளிந்து கொண்டிருந்தேன். அவர் எங்க அப்பா கிட்ட, 

" படிக்கிற இந்த சின்ன வயசில இந்த மாதிரி கதை புஸ்தகம் எல்லாம் வாங்கி கொடுத்தால் படிப்பு வீணாகி விடும் " 

போட்டு குடுத்திட்டாங்க என்று சொன்னால் மரியாதை இல்லை, எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலே,  நீங்க புரிஞ்சுகிட்டா சரி.  இனி வாங்கி தருவாரா?.  நானும்  கெஞ்சினேன், கதறினேன்,   ஊகும்  வாங்கி கொடுப்பேனா என்று சொல்லி விட்டார்.   ஆசிரியர்கள்  மீது அப்படி ஒரு மரியாதை !!.  வாத்தியார் சொல்லை மீறி  வாங்கி தந்தால், அவருக்கு அவமரியாதை என்று கடைசிவரை  வாங்கியே தரவில்லை.  வாழ்க அந்த ஆசிரியை நாமம்.

அப்பவெல்லாம்  கருக்கள்நேரத்திலேயே எழுந்து  ஒரு மைல் நடந்து சென்று, காலைக்கடனை திறந்த வெளியில் முடித்து,  வீடு வந்து சேர்வோம், பிறகு பள்ளிக்கு செல்வோம்.  மாலையில்  தவறாமல் செல்வது   பார்பர் ஷாப் ஒன்றுக்கு,  அங்கு  தினத்தந்தி இருக்கும்.  அந்த கடைக்காரர்தான்  என்னைப்போன்ற இளைஞர்களுக்கு அரசியல்  ஆசான்.  அவர் ஒரு பக்கா தி.மு.க. காரர்.  நான் முதலில் படிப்பது,  கன்னித்தீவு, தொடர் கதைகள்.   அவர்  தம்பி இன்னார், இன்ன இடத்திலே பேசியிருக்கிறார், படித்து சொல்லுங்க என்பார்,  நானும்  தி. மு. க. பெருந்தலைகள் போல், கரகரப்பு குரலில்  வல்லினம் மெல்லினம் சுத்தமாக படிப்பேன் ( அதாவது ) உரை ஆற்றுவேன். இதை கேள்விப்பட்டு என் அப்பாவிற்கு, உள்ளுக்குள் பெருமை  ( அப்பாவின் இன்னொரு முகம், தி.மு.க. தியாகி ( ? ),  நேருவுக்கு கருப்பு கோடி காட்டி ஜெயிலுக்கு போனவராக்கும் !!!! ).   அடுத்த  நிறுத்தம், அருகிலேயே உள்ள  நூல் நிலையம் தான்.  வார விடுமுறை நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களும், மாலை  நேரங்களில்  2  ,  3 மணி நேரம் அங்குதான் ஜாகை.  " கண்டதை படித்து  பண்டிதன் ஆனாள்  சரி "  என்று  எங்கள் அப்பாவும்  ஒன்றும் சொன்னதில்லை.

அந்த காலத்தில் நூலகத்திற்கு ஆயுள் சந்தா 3 ரூபாய் தான்,   ஆனால் அதை வாங்குவதற்கு  தர வேண்டிய, சான்று கடிதங்கள் ஏராளம்.  புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துசென்று படிக்கலாம்,  ஒரு டோக்கனுக்கு  ஒரு புத்தகம் தான். எனக்கும்  என் அப்பா ஒரு டோக்கன் வாங்கி தந்தார்.   அப்பொழுது  புதிதாக வந்த நூலக அலுவலர்  ( நூலகர் அல்ல )  வெளியூர் காரர்.  நாங்கள் குடியிருந்த தெருவிலே தான், அவரும் குடி வந்திருந்தார்.  அவரிடம்  பையனை பார்த்து கொள்ளுங்கள்  என்று சொல்லி வைத்தார்.

பார்பர் ஷாப்பில் உரையாற்றியது மற்றும்  கண்டதை படித்ததில்  கிடைத்த டிரைனிங்,   காரணமாக எனக்கு விரைவாக படிக்கும் ஆற்றல் வந்திருந்தது,   என் நண்பன் மூலமாக எனக்கு பரிச்சயமான வேறொரு குடும்பம், அவர்களது  இரண்டு  டோக்கன், அவர்களுக்கும்   சேர்த்து புத்தகம் எடுப்பது என்று பழக்கமாகிவிட்டது. நான் விரைவில் படித்துவிட்டு புத்தகத்தை மாற்ற சென்றால்,  நூலக அலுவலர் வழியில் மடக்கி,  படித்தா விட்டாய் ? என்பார் , ஆம் என்றால், நன்றாய் படித்துவிட்டு வா என்று திருப்பி அனுப்பி விடுவார்.  இது என்னடா பெரிய கரைச்சலாய் போய்  விட்ட தென்று,  அவர்  இல்லாத நேரமாய் பார்த்து,  புத்தகம் எடுத்து வருவேன்.  நாளடைவில் அவரே புரிந்து கொண்டு  விட்டு  விட்டார்.

அந்த  நூலகத்தில்  உள்ள பெருபாலான புத்தகங்களை நான் படித்திருப்பேன்,  வரலாற்று  நவீனங்கள் மட்டுமின்றி,  பல தரப்பட்ட விஞ்ஞான நூற்களும் அவற்றில் அடங்கும்.  சாண்டில்யன், கல்கி, நா. பா , மு.வ  போன்றோரின் நூற்கள் மட்டுமின்றி,  இன்று எனக்கு  உடனடியாக  நினைவுக்கு வராத  சில  ஆசிரியர்களின் நூற்கள்  என்று  பட்டியல் நீளும்.

சிறிய  ஊராக இருந்தாலும்  அக்காலத்திலேயே,  எங்களூரில் கலைக்கல்லுரி ஒன்றிருந்தது,  அதனால் " படிப்பாளிகள் "  ஞாயமான  அளவில் இருப்பார்கள், அவர்கள் குடியிருக்கும்  பகுதிக்கு மிக அருகில் நூலகம் அமைந்து இருந்ததால்.   எந்நேரமும் நூலகத்தில் கூட்டம்,  அமரக்கூட  சமயங்களில்  இடம் கிடைக்காது,  இத்துணைக்கும்  25 , 30 பேர்  அமரும் கொளளளவு  கொண்டது.  அப்பப்ப வரக்கூடிய  வார, பருவ இதழ்களை படிக்க கூட்டம் அலைமோதும்.  ஏற்கனவே  படித்துகொண்டிருப்பவரிடம்,  சொல்லி வைத்து     ( அட்வான்ஸ் புக்கிங்  !!!! ) அவர் படித்து முடித்ததும் வாங்கி படிப்போம்.  அந்த  "வெய்டிங் " நேரத்தில்,  பெரும்பாலும் தீண்டப்படாமல்  கிடக்கும்  ஆங்கில தினசரிகளை  புரட்டி கொண்டிருப்பேன்,   அதனால் தானோ என்னவோ,  சில காலங்களுக்கு பிறகு  அறிஞர் அப்துர் ரஹீம்,  டாக்டர்  எம். எஸ். உதய மூர்த்தி  போன்றோரின்  சுய முன்னேற்ற புத்தகங்கள்  படித்து,  அதில்  அவர்கள்  மேற்கோள் காட்டும் ஆங்கில மூல  ஆசிரியர்களின்  புத்தகங்களை வாங்கி படிக்கும் அளவிற்கு " தைரியம் "  வந்தது போலும்.  இதனால்  வந்த ஒரு " சைட் எபெக்ட் "  என்று பார்த்தால்,  கவனம் இருவேறு இடங்களில்   இருந்ததால்,  வார்த்தைகள் நினைவு இருந்தாலும்,  வார்த்தைகளில்  ஒரொரு எழுத்துக்களை   "சாப்பிட்டு " விடும் நிலைமை ஏற்பட்டு விட்டது.  தற்காலத்தில் கான்வெண்டுகளில்  3 ஆம் வகுப்பில் படிப்பவர் மெச்சும் அளவில் கூட,  என்  ஆங்கில புலமை இல்லாமலாகிவிட்டது !!!!!!!

சாண்டில்யன், கல்கி போன்றோரின் படைப்புக்கள், இரண்டு மூன்று பிரதிகள் இருந்தாலும்,  ஒவ்வொன்றும்  பல பாகங்களை கொண்டு இருக்குமாதலால் கிடைப்பது சிரமமாய் இருக்கும், சொல்லி வைத்து எடுத்து செல்லுவோம். மு.வ ,  கி .வா.ஜா,  போன்றோரின் படைப்புக்களை  எழுத்திற்காக படிப்போம் என்ற பக்குவம் இல்லாமலிருந்தாலும், அவர்தம்  புகழ், பெருமையின் காரணமாக எடுத்து சென்று படிப்பதுண்டு.

சாண்டில்யனின் கதைகளை பலமுறை திரும்ப திரும்ப படித்திருக்கிறேன், கல்கியின்  பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வற்றைய்ம் பல முறை படித்திருக்கிறேன், அதிலும்  பொன்னியின் செல்வன் படித்தது தான் அதிகம். இன்றும் கூட பொன்னியின் செல்வனை கணினியில் டிஜிடல் காப்பி யாக வைத்துக்கொண்டு,  குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் படித்து, மனதிற்கு கிளு கிளுப்பை  ஏற்படுத்திக் கொள்வதுண்டு.

மேற்கண்ட கதை மாந்தர்களுடன் ஒரு நெருக்கமான ஈர்ப்பு ஏற்பட காரணம், நான் முன்பே  குறிப்பிட்டு இருக்கிற, என் நண்பன் மூலம் பழக்கமான குடும்பம்.  அவர்கள் வீட்டில் அலுவலகங்களில் வேலை பர்ர்ப்பவர்கள் இருந்தார்கள், அவர்கள் வீட்டில் உள்ள பெண்களின் பொழுது போக்கிற்கென்று  எல்லா மாத, பருவ இதழ்களையும் வாங்குவார்கள்.  மற்றவர்கள் போலன்றி அவைகளை  படித்து முடித்து விட்டு , கடலை காரரிடம் எடைக்கு போடாமல், கதைகளை  மட்டும் சேர்த்து  " பைண்ட் "  செய்து வைத்து, ஒரு சிறு நூலகமே அவர்கள் வீட்டில் இருந்தது.  அந்த தொகுப்பில் இருந்து பல கதைகளை படத்துடன் பார்த்து படித்திருப்ப து  தான்.

காலக்கிரமத்தில்,  ஊரைவிட்டு,  நாட்டை விட்டு உழைக்க வென்று வெளியேறி, தமிழை தொடர்பு  மொழியாக மட்டுமே பலகாலம் கொண்டு,  படிப்பதை,  சுவைப்பதை முழுதுமாக நிறுத்தியாகி விட்டது.  பணத்தையும் இலக்கையும் மட்டுமே குறியாய் கொண்டு  உழைத்து கொண்டே இருந்து விட்டு,  சிறிது  ஆசுவாச படுத்திக்கொண்டு தொடர்வோமே என்று நிமிர்ந்த நேரத்தில் தான் நினைவு வந்தது  தாய் மொழியும், நாடும்.

பழைய நினைவுகளை தூசு தட்டி எழுப்பி,  சாண்டில்யனோடும் கல்கியோடும் கை கோர்த்து நடக்க தொடங்கினால்,  அய்யய்யோ........ என்னவாயிற்று எனக்கு,  நான்  நான்தானா........  எனக்கு கிறுக்கு எதுவும் பிடிக்க வில்லையே  கையில் எடுத்தால் முடிக்கும் வரை விடாமல் படிக்க வைக்கும் அந்த காந்த சக்தி எங்கே  காணமல் போனது ?.......,  முட்டாத்தனமாய் தெரியுதே ............ சே .. எனக்கென்ன தகுதி இருக்கிறது ?  இவர்கள் எழுத்தை சுண்டிபார்க்க ......  எடத்தை காலிபண்ணு என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, தேள் கொட்டிய திருடனாய்,  வீட்டை விட்டு வெளியேறி நடந்தேன்.

காந்தா ராவ்,  எம்.ஜி .ஆர்., வீரப்பா போன்றோரின் சினிமா ஓட்டி, எந்நேரமும் திருவிழா கடையாய்  திகழ்ந்த இடம்,  யாரும் நல்ல விலை கொடுக்கும் ரியல் எஸ்டேட்காரர் கண்னில்  பட மாட்டோமாஎன்று நின்று கொண்டு,  சும்மா இல்லாமல்  எதோ வந்தாலும் சரியென்பது போல்,  முற்காலங்களில் வீட்டில் சென்று பயிற்சி எடுக்கத்தூண்டும் வீர வசனங்கள் நிறைந்த படம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.   எதுகையும், மோனையும் வசனத்தில் இருந்தது ஆனால் பொருள் இருந்ததா என்றால் இல்லை,  அடடா........... இதென்னடா கோளாறு........   இதையெல்லாம் போய்  பேசிபேசி பார்த்தோமே  அட கடவுளே ........ ,  இதுக்குத்தான்  எல்லாத்துக்கும்  ரிஷி மூலம், நதி மூலம் பார்க்கக்கூடாது என்றார்களோ ?.   பழ மொழிகளெல்லாம் நறுக்கு தெறிச்ச மாதிரி சின்னதா சொல்லி இருக்காங்களே,  ஒருவேளை கொஞ்ச நாள் கழித்து படித்தால், கிறுக்கு தனமாய் தோன்றும் என்று தான்,  சின்னதாய் சொல்லி அவனவன் இஷ்டத்துக்கு விளக்கம் சொல்லிக்கொள்ளட்டும்  என்று விட்டுவிட்டார்கள ?.   மண்டையை பிச்சுக்க  தோணுதே அய்யய்யோ..........

கொஞ்ச நாள்  எதையும் பேசாமல் எனக்குள்ளே வைத்திருந்தேன். நான்தான் கிறுக்கனா ?.  அல்லது எந்தவிதமான சார்பும் இன்றி சிந்தித்தால் எல்லோருக்குமே இப்படித்தான் தோன்றுமா?, விடை அறியத்தான் இந்த பதிவு.

சொல்லுங்களேன் அய்யா, நான்தான் கிறுக்கனா ??????

Saturday, July 25, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் - 6

கடந்த சில பதிவுகளில், பணப்புழக்கம் இருக்கின்ற காலங்களில், பெரும்பாலோர் போன்று நாமும் வாழ வேண்டும் என்கின்ற  ஆழ்ந்த சிந்தனை அற்ற நோக்குடன் செயல் படுவதால், நாம் அடைந்திருக்கிற, அடையக்கூடிய  நஷ்டத்தை, எளிய கணக்குகளின் மூலம் விளக்க முயன்று இருக்கிறேன்.

வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருக்கிறது சேமிப்பது எப்படி என்பவர்களுக்காக, நாம் பிரச்சனைகளை  அணுகுகின்ற முறைகளை, மாற்றி சிந்தித்து  செயல்பட்டால்,  செலவுகளை குறைத்தால், அவைகளை சேமிப்பாக, உபரி வருமானமாக ஆக்கி கொள்ள முடியும் என்பதையும் கோடிட்டு காட்டியிருந்தேன். மேற்கொண்டும் சேமிப்பை நமக்கு வேலை செய்யகூடியதாக  ஆக்கக்கூடிய சில முதலீட்டு முறைகளை சொல்லத்தொடங்கி , தங்கம்,மற்றும் தங்க  நகைகளில் தொடங்கி வைத்தேன்.

மாற்றி சிந்திப்பது என்று எழுத தொடங்கிய போது  நினைவில் ஊடாடிய ஒரு    " சுடச்சுட "   என்று சொல்லத்தக நிகழ்கால  நிகழ்ச்சி ஒன்றை சொல்லி காட்டுகிறேன்.

நான் முக்குளிக்காமல் பள்ளி இறுதிதேர்வு  முடித்து கல்லூரியில் சேர்ந்து விட்டோம் என்ற வெற்று  ( அன்றைக்கு தெரியாது ) பெருமையில் இருந்த காலம்.  அருகில்  13  KM  தூரத்தில் உள்ள ஊரிலிருந்து பழைய இரும்பு வாங்க வென்று எங்களூருக்கு வந்து  ஒருவர்  சைக்கிளில் தெரு தெருவாக சுற்றி வருவார். துரு  பிடித்த  பழைய சைக்கிள், காரியரில்  ஒரு அரை கள்ளிப்பெட்டி, அதில்  ஒரு பெரிய அமுல் பால் டின் டப்பாவில்  வேர்கடலை, திராசு படிக்கல், இவை தான்  அவரின் தளவாடமும் ,.முதலீடும்.  சின்ன சின்ன சாமான்களுக்கு வேர்கடலை, பெரிய சாமான்களுக்கு  காசு.  வெயில் மழை பாராமல் தினமும் வருவார். பெரும்பாலான நாட்களில் எங்கள் தெருவில்  எதுவும் கிடைக்காது,  இருந்தும்  காலை மாலை இருவேளையும் வருவார். சில நாட்களுக்கு பிறகு அவருடன் பேச்சு கொடுத்து அறிந்து  கொண்ட விஷயம், அவருடைய                    " தளவாட "  சாமான்கள் எதுவும் அவருடையது அல்ல,  எல்லாம் அவருடைய     " முதலாளி " வுடையது, வாங்கு கின்ற  சாமான்களை முதலாளி விலை கொடுத்து வாங்கி கொள்வார். கொள்முதலுக்கும், விற்ற விலைக்கும் உள்ள வித்தியாசம் அவருடைய லாபம்.இவரை போல் பலர்  சுற்று வடடார ஊர்களில்  தொழில் செய்வதாக சொன்னார்.  கல்லூரி முடித்து சென்னை சென்ற பின்பு அறிந்து கொண்ட செய்தி,  திருச்சி , மதுரை ,கோவை போன்ற பெருநகரங்களிலும் கூட இப்படிதான் நடக்கிறது என்று.        இது தான்                     " பிரான்சைசிங் "  என்பதற்கு அடிப்படை போலும். இரண்டாம் உலகப்போருக்கு பின்பு  ஐரோப்பாவில் இருந்து  புலம் பெயர்ந்து வந்த யூத இனமக்கள், அமெரிக்காவின் பெரு நகரங்களில்,  குறிப்பாக  நியூயார்க்கில் பிழைப்பு நடத்தியதும்  இவ்வாறுதான்.   பல ஆண்டுகளுக்கு  பிறகு கடந்த ஆண்டு அவரை பற்றி விசாரித்த போது,  அவர் பெரிய ஹோல்சேல் இரும்புக் கடையும், பழைய இரும்பு கடையும்  வைத்துக்கொண்டு,  லட்ச கணக்கில் பெறுமதியுடைய  வீடுகளுடன் வசதியாக இருப்பதாக கேள்விப்பட்டேன். இப்பொழுது அவரிடம் வேலை பார்பவர்களுக்கு  " கவரேஜ் ஏரியா " வை கூடுதலாக்குவதற்காக   சைக்கிளுக்கு பதிலாக   டிவிஎஸ்  50  வாங்கி கொடுத்து தொழில் செய்வதாக சொன்னார்கள் !!!!!!!!!. இது போன்றே இன்னும் பேப்பர் தொழில் செய்து பணம் பண்ணிக்கொண்டிருப்பவர்களை பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த  தொழில் மாடல் 30, 40 ஆண்டு பழமையானது என்றாலும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 மேற்கண்ட முறையையே, போட்டியின் காரணமாக வருமானம் குறைவாக கிடைப்பதை ஏற்றுகொள்ள மறுத்த ஒரு தொழில் முனைவர், மாற்றி சிந்தித்து மாதம், ரூ 2,40,000/ சம்பாதிக்கிறார். நெடுந்தூர ரயில்களில் தானும் இன்னும்,அறுவரும் பயணம் செய்கின்றனர், வண்டி நிற்கும் இடங்களிலெல்லாம் இறங்கி, பயணிகள் வீசும்  அலுமினிய குப்பைகளை மட்டும் பொறுக்கிக்கொண்டு வண்டியில் ஏற வேண்டியது.   ரயில்  சென்று திரும்பி வர  எடுக்கும் 4 நாட்களுக்கான  சாப்பாட்டு செலவு, ரயில் டிக்கட் செலவு எல்லாம் தொழில் முனைவரை சேர்ந்தது.   ஒவ்வொரு தொழிலாளிக்கும்  4 நாட்களில் 100 கிலோ குப்பை சேகரிக்க வேண்டியது என்பது இலக்கு. (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூ 4,000/ !,  8 பேரின் சம்பாத்தியம் ரூ 32,000/ !!, மாத சம்பாத்தியம் ரூ 2,40,000/ !!! ,செலவு ரூ 40,000/ !!!!, வருமானம் ரூ 2,00,000/ !!!!!, வருட வருமானம் ரூ 24,00,000 !!!!!!.  நம்ப முடிகிறதா ?.  இது  அமெரிக்காவிலோ,  ஜப்பானிலோ , ஆஸ்திரேலியாவிலோ இல்லை சகோதரர்களே !!!!!!.  நம் தமிழ் நாட்டில் தான். 
இன்று அவர் வருமானத்தை எதில் முதலீடு செய்வது என்று யோசித்து கொண்டிருக்கிறார்.  சரியான முறையில் சிந்தித்து முதலீடு செய்தால் ஐந்து வருடங்களில் எங்கோ போய்விடுவார்.

முக்கியமான செய்தியை சொல்லாமல் விட்டுவிட்டேன், உலகிலும் சரி, நம் நாட்டிலும் சரி பெரிய பெரிய பணக்காரர்கள் தங்களுடைய சொத்து மற்றும் பண விவகாரங்களை  யாரிடமும் பகிந்து கொள்ளாமல் தமக்குள் ரகசியமாகவே வைத்திருக்கின்றனர்.   தன மக்கள், மனைவியர் கூட அறியாத அளவிற்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். உர்து / ஹிந்தி பேசுகின்ற வட மாநிலங்களில்  ஒரு சொல்லடை  "  தௌலத்  ஔர்  அவுரத் கே பாரே மேம் பாத் நஹின் கர்ணா "  என்பதாக , அதாவது  சொத்தை பற்றியும் மனைவியை பற்றியும் யார்டமும் எதுவும் பேசாதே !!!!!

எங்களூரில் வெளிநாடுகளில் வேலை செய்யக்கூடியவர்கள் அதிகம். பெண்கள்  பிரசவ நேரத்தில்,  அம்மம்மா......இந்த வேதனையை என்னால் தாங்க முடியாது......  இதுபோதும், இனிமேல் பிள்ளையே வேண்டாம் என்று பிரசவ " சங்கல்பம் "  எடுத்து கொல்வார்களாம்..  குழந்தையின் முகத்தை பார்த்ததும் " பேறுகால " சிரமங்களையெல்லாம் மறந்து, சிற்சில மாதங்களில்  மறு குழந்தைக்கு தயாராகி விடுவார்களாம்.   அப்படி, இனி வெளிநாட்டு வாழ்க்கையே வேண்டாம் என்று  விரக்தியாய்  ஊர்  திரும்பியவர்கள்.  சரியான  திட்டமிடல் இல்லாததால் ஓரிரு மாதங்களிலேயே,  புத்தம் புது சட்டை துணிமணிகளின்  " புதுக்கருக்கு "  மாறுமுன்பே   " அட்டையை " தூக்கிக்கொண்டு   " புதிய மேய்ச்சல் நிலங்கள்   "  தேடி அலைய ஆரம்பிப்பார்கள்.  இம்மாதிரியானவர்கள் கூடி குதுகளிக்கவும், ஊர்நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் ஊரின் நிரந்தர பிரஜைகள் இவர்களுடன்,  ஊடாடவும்  செககடிகுளத்து  மேடு என்ற ஒரு வசதியான              " வெட்டியரங்கம் " அமைந்திருக்கிறது.  முதல் நாள் இரவு  நடுநிசி  வரை கூட கூடி பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள், யாருக்கும் என்னவென்று  தெரியாது, அடுத்த  இரெண்டொரு நாட்கள் காணாமல் போயிருப்பார்கள், மூன்றாம் நாள் யாருக்காவது போன் வரும்,  இன்ன நாட்டிலே இருக்கிறேன் என்று. அவ்வளவு ரகசியம்.  வெட்டியரங்கத்திலோ   சென்ற  மாட்டை தேடுவாருமோ,  வந்த மாட்டை கட்டுவாருமோ  இருப்பதில்லை. இப்படி சென்றவர்கள் உலகின் பல நாடுகளில் வாழ்கிறார்கள்.

உலக அரங்கிலே ஆங்காங்கே தினமும் விவரம் வெளிவருகிற பில்லியனர், மில்லியனேர் பற்றிய செய்திகள்,  அவர்களின் இந்த இரகசியத்தையே  வெளிக்காட்டுகின்றன.  இது ஏன் எப்படி என்று  யாரும் கேட்கவும் இல்லை, எல்லோரும் இவ்வாறே நடந்திருக்கிறார்கள். யாருக்கு விளக்கம் தெரியவில்லை, எனக்கும் சொல்லத்தெரியவில்லை, அது அப்படித்தான்.  அடுத்த பதிவில், கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட்டு பற்றியும் இறைவன் நாடினால் காணலாம்


     

Friday, July 24, 2015

வஹியாய் இறங்கிய குர்ஆனும், இன்றைய குர்ஆனும்

உலகத்தில் ஆங்காங்கே அவ்வப்போது  சில நிகழ்சிகள்  வெளியாகி  இஸ்லாம் என்கிற மார்க்கம் சொல்லுகிற பழம்பெரும் செய்திகளுக்கு,  ஆதாரங்களை அள்ளி தெளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில்  உலகை "உலுக்கக்கூடிய "  என்றும் " ஈது "  கொண்டாடி களித்திருக்கும் உலக முஸ்லிம்களுக்கு பேருவகை கொள்ளும்படியான செய்தி என்பதாகவும்  சொல்லி "கிறிஸ்டியன் மானிடர் "  என்ற இங்கிலாந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், உலகையே பிரமிப்படைய வைக்க வல்லதாக,  உலகின் மிகப்பழமையான கையெழுத்து பிரதி என்று சொல்லக்கூடிய, கைகளால் எழுதப்பட்ட  இரண்டு  திரு குர்ஆன் பக்கங்களை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

“Researchers conclude that the Qur’an manuscript is among the earliest written textual evidence of the Islamic holy book known to survive,” the university wrote in an official statement. “This gives the Qur’an manuscript in Birmingham global significance to Muslim heritage and the study of Islam.”
புராதன பொருள்களின் பழமையை தீர்மானிக்க வல்ல நவீன  "ரேடியோ கார்பன் அனாலிசிஸ் "  சோதனை  ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தால், இவ்விரு கையெழுத்து பிரதிகளிலும்  செய்யப்பட்டு.  அவை  95 %  அளவிற்கு உறுதியாக ,  AD  570 மற்றும் AD 632 இக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை யாக   இருக்கககூடுமென்று அறிவிப்பு  செய்திருக்கிறார்கள்.

AD 570 மற்றும் AD 632 இக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படுகிற  நபி முஹம்மது ( சல்லல்லாஹு அலைஹிவசல்லம் ) அவர்களின் இறப்பிற்கு  பின்   20 ஆண்டுகளுக்கு உட்பட்ட  கால கட்டத்தை சார்ந்த கையெழுத்து பிரதிகளாக இருக்க கூடும் என்பதாக ஆராய்ச்சி  முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
இந்த கையெழுத்து பிரதிகள் நம்மை, இஸலாம் நிறுவப்பட்ட ஆரம்ப காலகட்டத்திற்கு அழைத்து செல்கிறது என்பதாக, பிர்மிங்காம் பல்கலைகழகத்தை சேர்ந்த  இஸ்லாம் மற்றும் கிருத்தவ பேராசிரியரான டேவிட் தாமசும், இன்டெர் ரிலிஜியஸ் ரிலேசன்ஸ் பேராசிரியர் நாதிர் தின்ஷா என்பவரும் தெரிவிக்கிறார்கள்

AD 610 வாக்கில் நபிகளாருக்கு , வானவர் ஜிப்ரீல் மூலம் வஹியாக இறங்க தொடங்கிய  திரு குர்ஆன்,  மனிதர்களால் மனனம் செய்யப்பட்டு                    பாதுகாக்கப்பட்டதாகவும்,   நபிகளாருக்கு பின்னால்,  முதல் கலிபா அபூபக்கர் (ரலி),  முதன் முதலில் புத்தக வடிவில் திரு குர்ஆனை தொகுக்க ஆணை  இட்டதாகவும், அப்பணி 3 ஆம் கலிபா உத்மான் (ரலி) காலத்தில           AD 650 வாக்கில்,  முழுமை அடைந்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.

இன்று முஸ்லிம்களிடையே இருக்கும் திரு குர்ஆன், நபிகளாருக்கு அருளப்பட்ட அதே குர் ஆன் தான் , எந்த வித மாற்றமோ,இடை சொறுகள்களோ இல்லாமல்,  தங்களிடையே  இருப்பதாக நம்புகிறார்கள், இன்று கிடைத்திருக்கும் இந்த கையெழுத்து பிரதிகளின் ஆதாரம், அவர்களின் நம்பிக்கையை உறுதி படுத்துவது போலவே இருக்கிறது, என்பதாகவும் மேலும் எழுதுகிறார்கள்.

"These portions must have been in a form that is very close to the form of the Qu’ran read today, supporting the view that the text has undergone little or no alteration and that it can be dated to a point very close to the time it was believed to be revealed,” they added.

இரண்டு  இதழ்களில், பழைய காலகட்ட அரபி எழுத்து வடிவான " hijaazi " எழுத்துருவில்,  18 வது  20வது  சூராக்களின் பகுதிகள் மை கொண்டு  எழுதப்பட்டுள்ளன.  இவை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக, 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த  குர் ஆன்  பிரதிகளுடன் கலந்து கிடந்ததால்  இத்தனை காலமும்  கண்டு பிடிக்கப்படாமல் இருந்திருக்கின்றன .

  Preserved on two parchment leaves, the text contains parts of Suras (chapters) 18 to 20 written with ink in an early form of Arabic script known as Hijazi. For nearly a century, the manuscript had been misplaced with leaves of a similar Quranic manuscript, which is also datable to the late seventh century.

இந்த கையெழுத்து பிரதிகள், பல்கலைகழகத்தின் "  மின்கானா தொகுப்பு "  என்கிற மத்திய கிழக்கு நாடுகளின் கையெழுத்து பிரதிகள்  அடங்கிய தொகுப்பை சார்ந்தது, காட்பரிஸ் ஆராய்ச்சி நூலகத்திற்கு சொந்தமானது.  இராக்கில் பிறந்து இங்கிலாந்தில் தங்கி விட்ட  அல்போன்சோ மின்கானா என்ற பாதிரியாரால், 1920 வாக்கில் கடத்தி வரப்பட்டது.

Tuesday, July 21, 2015

தேவயாணி கோபர்கேடேயின் பித்தலாட்டம்...........

நமது நாட்டிலே எல்லோருமே எப்படியாவது அரசாங்க உத்தியோகத்தை பெற்று விடவேண்டுமென்று துடியாய் துடிக்கிறார்கள். காரணம்,  வேலை பெற்றுவிட்டால்  ரிடையர் ஆகும் வரை எந்த கொம்பனாலும், என்ன ஊழல் செய்தாலும், வேலையை விட்டு தூக்க முடியாது.லஞ்சம் அது  இது என்று மாட்டிக்கொண்டாலும், லஞ்சம் வாங்கிய தொகையில்  10 லிருந்து 25 சதம் செலவழித்தால் போதும்  கேசு முடிந்துவிடும்!!!!!!.  சஸ்பண்டான காலத்து சம்பளத்தையும்  சொளையா வாங்கிக்கொள்ளலாம், இன்னும் இத்தியாதியான வசதிகள், வாய்ப்புக்கள்.


அதிலும் குரூப் 1 படித்தவர்கள்,  அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் தூதரகங்களில் வேலை பார்க்கின்றவர்கள் அடிக்கின்ற லூட்டிக்கு அளவே இல்லை. இங்கே அவர்களைப்போல் தூக்கினாற்போல் இல்லாமல், பல்வேறு சிரமங்களுக்கும் முயற்சிகளுக்கும்  பின்னால் வெளிநாடு வந்து,  அங்கும் ஒட்டாமல் இங்கும் ஒட்டாமல்  திரிசங்கு சொர்க்க வாழ்கை வாழ்ந்து, வாயை கட்டி வயிற்றை கட்டி சம்பாதிக்கின்ற அனைத்தையும் ஊருக்கு அனுப்பி   (அந்நிய செலாவணி யின் காம தேனு  இவர்கள் தான் )  வைத்து  இவர்கள, என்ன சேவைக்கென்று தூதரகம்  சென்றாலும் வாங்குகின்ற கட்டணத்தாலும், நத்துகின்ற முறையாலும், படுத்துகின்ற பாடு கொஞ்சநஞ்சமல்ல.


ஒருமுறை நான்,  87, 90 களில்  என்று ஞாபகம், சவுதி அரேபியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த  போது,   1500, 2000 இந்தியர்  வேலை பார்த்த கம்பனியில், சொல்லி அழைத்து சென்ற  வேலை கொடுக்காதது, பேசிய சம்பளம் கொடுக்காமை, தங்குமிட பிரச்சனை, இதுபோன்ற  இன்னும் பல காரணங்களுக்காக  ஒன்றரை இரண்டாண்டுகள் ஊமையாய்  போராடிய தொழிலாளர்கள்,  உதவி  வேண்டி தூதரகத்தை  அணுகிய போது,  பலமுறை  அலைக்கழிக்கப்பட்டு கடைசியாக இந்திய  தூதரை சந்தித்தனர்,  அவர் எல்லா தொழிலாளிகளையும் ஒற்று கூட்டி பேச்சுவார்த்தை நடத்த போவதாக   சொல்லி  கூட்டம் கூட்டினார் . அக்கூட்டத்தில்  பேசிய இந்திய தூதர்,  நம் நாட்டில் உள்ள வேலை இன்மை, வறுமை போன்றவைகளை சுட்டிக்காட்டி, கம்பனிகாரனுக்கு சாதகமாக, கம்பனியுடன் தகராறு செய்யாமல் ஒத்து போகும்படி  அறிவுரை வழங்கினார்.  கூட்டத்தில் இருந்த வடநாட்டு இளைஞர் சிலர் எழுந்து கோரசாக இந்திய தூதரை நோக்கி

      சச்சா எத்தனை சூட் கேஸ்  வாங்கினீர் ? 

 என்பதாக கேட்டார்கள்.

 இவர்கள் இந்திய பிரஜைகளுக்கு உதவுகின்ற லச்சணம் இதுதான்


அமேரிக்கா  போன்ற மேல்நாடுகளில், மேல்தட்டு மக்களின் ஸ்டேடஸ் சிம்பலாக கருதப்படுகிற,  gouchi , loui  vutton போன்ற பெயர்பெற்ற கம்பனிகளின் பெல்ட், பேக் போன்றவற்றின்  "  நாக் அவுட் " என்று சொல்லப்படுகிற  போலி யான சரக்குகள்,   சட்டத்திற்கு புறம்பான  முறையில்  சீனாவில்   தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வகையான " நாக் அவுட் " சமாசாரங்களின் வருடாந்தர மதிப்பு சில நூறு பில்லியன் டாலர்கள்.  அந்தந்த பிராண்ட் உரிமையாளர்கள் இதனை தடுக்க வென்று  வழக்கு தொடர ,  அமெரிக்க அரசு யார் அனுப்புவது ?,  யார்  தயாரிப்பது ?  என்று விசாரிக்கும்  போது,  சீனா  எங்களுக்கு  தெரியாது என்று சொல்லி, தகவல் தர மறுத்து வருகிறது.  அரசுக்கு தெரியாமல், சுங்கத்துறை அறியாமல் இது நடக்க முடியுமா ?. அத்துனை வருமானமும்  நேரிடையாகவும்  மறைமுகமாகவும் வரப்போவது சீனாவிற்குத்தான். ஆகையால் சீன அரசே தன ஏற்றுமதியாளர்களை  காட்டி கொடுக்காமல். முழுக்க முழுக்க பாதுகாப்பு தருகிறது.


எந்த நாட்டிலே இருந்தாலும்,எத்தனை காலம் இருந்தாலும் இந்தியர்கள் தான் பிறக்காத  வேற்று மண்ணை தன சொந்த மண்ணாக எண்ணப்போவதே இல்லை. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, அவர்கள் வாழுகின்ற நாடுகளில்  ரிடையர் ஆகும் காலத்தில் பண  உதவி  பெற்றுக்கொள்ள   சோசியல் செக்குரிட்டி என்ற   முறையை ஏற்படுத்தி  இருக்கிறார்கள்,  அதனால்  வயதான காலத்தில் கவலையில்லை.  இவர்களெல்லாம்  தன உபரி வருமானத்தை எல்லாம் இந்தியாவிற்கு தானே அனுப்ப போகிறார்கள், அனுப்புகிறார்கள்.  அவர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி யாருக்கு பயன்பட போகிறது ?.  NRI  என்று சொல்லப்படுகிற  இவர்கள் போன்றவர்களின்  வருமானத்தின்  ஒரு சிறு துளியாவது தூதரக அதிகாரிகளின்  சம்பளத்தின் பகுதியாக ஆகாதா ?  இவர்களுக்கு எவ்வகையிலேனும்  உதவ,  சேவை  தர வேண்டும் என்ற மனப்பான்மை  வரமறுக்கிறதோ  தெரியவில்லை. தனக்கென்று சட்டத்தை வளைக்கும் இவர்கள், NRI  களுக்கு சலுகைகள் செய்தால் யாருக்கு நஷ்டம் வரப்போகிறது. இந்தியாவில்  நடக்கின்ற நிகழ்சிகளால்  உலக அரங்கில் இந்தியாவிற்கு இருக்கின்ற மதிப்பு  சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை,  இவர்கள்களின் கெடுபிடிகளால்,  NRI  களின்  மத்தியில் இவர்களுக்கு  நற்பெயர்  என்பதே கிடையாது,  இதனால் தான்  இவர்களுக்கென்று  பிரச்சனைகள் வரும்போது   தார்மீக ஆதரவு  தரக்கூட  யாரும் தயாரில்லை.  இந்தியர் மனநிலையும், சீனர்  மன நிலையையும் ஒப்பிட்டு  பாருங்கள். இவ்வதிகாரிகளின் மோசமான  செயல் பாடுகளுக்கு   சான்றாக மீண்டும் வந்திருக்கும்  தேவயாணி என்பவரின் செய்தியை பாருங்கள்.


தேவயாணி கோபர்கடே என்ற வெளியுறவு அதிகாரியை பற்றி அறிமுக படுத்த  தேவையே இல்லை,  இவரது  கைதால் இந்திய தேசத்தின் மானமே  போய் விட்டதாய், இந்திய தேசமே  அல்லோகலப்பட்டு செய்திகள் வந்ததன்  விளைவாய்  அவர் பற்றி அறியாதவர்கள்  இருக்கவே வாய்ப்பில்லை.


அந்நிய மண்ணில்  இந்திய பிரஜையின் உரிமையை, பாதுகாப்பை  நிலை  நிறுத்த  வேண்டிய, ஒரு இந்திய தூதரக அதிகாரி, பப்ளிக் சர்வண்ட் ஆன  ஒருவர்,  ஒரு இந்தியரை கொத்தடிமை போல் நடத்தி கொடுமை படுத்தியது  மட்டுமின்றி, தன சுய நலனுக்காக,  இந்திய தேசத்தின் பிரதிநிதியாக செயல் பட்ட ஒரு உயர்நிலை அதிகாரி,  பொய்யான  சத்திய பிரமான பத்திரங்களில் கையொப்ப மிட்டு கொடுத்து  இந்திய  நாட்டின் மானத்தை கப்பலேற  வைத்தவரை,  அவ்விசயத்தியே  கண்டு கொள்ளாமல், இருட்டடிப்பு  செய்து,  தன எல்லைக்குள் வந்துவிட்டால், இந்நாட்டு மக்கள் போல்,  என்நாட்டு மக்களுக்கும்,  உரிமையும்  மரியாதையும் பாதுகாப்பும் தருகிற பெருந்தன்மையும், மனித நேயமும் கொண்ட அமெரிக்காவை, நிந்தித்தவர்கள்  அல்லவா    தேச பிதாக்கள்  என்று சொல்லி  கொள்ளும் அரசியல் அடிப்பொடிகளும் ,  முதுகெலும்பற்ற பத்திரிகையாலர்களும !!!.   சிறுபிராயத்தில் பள்ளிப்பிள்ளைகள்  ஏட்டிக்குப்போட்டியாய்  சண்டைகள் போட்டுக்கொள்வது போல், எமதரிகாரியை  கைது  செய்தாயா  ? , ன வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசி, அமரிக்க தூதரகங்களின் பாதுகாப்பு  ஏற்பாடுகளை தளர்த்தி தன்னை தானே கேலிக்குரியவர்களாய் ஆக்கிக்கொண்டனர்   சிறுமதியாளர்கள் .    அமெரிக்க விமான நிலையங்களில் இந்திய  VIP  கள் அவமானப்படுத்த பட்ட போது இந்த காரியத்தை செய்திருந்தாலாவது  கௌரவமாக இருந்திருக்கும்,  அந்த நேரத்தில்  செய்திருந்தால் நமக்கும் சுய மரியாதை, முதுகெலும்பு  இத்யாதிகளெல்லாம் உண்டென்று பறை சாற்றி  பெருமை பட்டுக்கொண்டிருக்கலாம்.


தேவயாணி  நிகழ்ச்சி சம்மந்தமான தொடர் விசாரணைக்கும், ஆய்வுக்கும் பிறகு தகவல்கள் வந்திருக்கின்றன, அமெரிக்காவில் இருந்தல்ல நண்பர்களே !!!  நம்மவர்களின் தகவல் தான்.. ஆ ஊ  வென்று முழங்கியவர்கள்  என்ன சொல்லப்போகிறார்கள் ?,   கீழே பாருங்கள்  செய்தியை

 புதுடில்லி: அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரியாக பணிபுரிந்த தேவயானி கோப்ரகாடே, அரசின் விதிகளை வேண்டுமென்றே மீறி அவருடைய குழந்தைகளுக்கு இந்தியா மற்றும் அமெரிக்க பாஸ்போர்ட்களைப் பெற்றுள்ளார்.; இதனால் அவருடைய நேர்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


2013ல் அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரியாக இருந்த தேவயானி, அவருடைய வேலை செய்த பணிப்பெண் சங்கீதாவுக்கு விசா மற்றும் சம்பளம் வழங்குவதில் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கடுமையான குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.

வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க இந்திய சட்டம் அனுமதிக்கவில்லை. தேவயானியின் குழந்தகளுக்கான இந்திய பாஸ்போர்ட்கள் செல்லாதென, கடந்த டிசம்பரில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தேவயானி குழந்தைகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டில்லி ஐகோர்ட் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலாக தாக்கல் செய்த மனுவில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.

அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: குழந்தைகளுக்கு இரண்டு பாஸ்போர்ட்கள் வைத்திருப்பது தேவயானியின் நேர்மை குறித்து சந்தேகத்தை எழுப்பி உள்ளது. அவருடைய குழந்தைகளுக்கு அமெரிக்க பாஸ்போர்ட் இருக்கும் தகவலை வெளியுறவுத் துறையிடம் அவர் மறைத்திருக்கிறார்.

இந்திய அரசின் விதிகளையும் நடைமுறைகளையும் தெரிந்தே, வேண்டுமென்றே அவர் மீறியிருப்பதால் அவருடைய செயலுக்குரிய பின் விளைவை அவர் சந்தித்தே ஆக வேண்டும். அமெரிக்க பாஸ்போர்ட் பெற்ற அந்த நிமிடத்திலேயே அந்த குழந்தைகள், இந்திய பிரஜைகள் என்ற தகுதியை இழந்து விட்டனர்.

இத்தகைய செயல்களால் இந்திய அரசை தேவயானி ஏமாற்றி விட்டார். இந்திய வெளியுறவுத் துறை சேவைக்கான நடத்தை மற்றும் ஒழுங்கு விதிகளையும் மீறியுள்ளார்.

16 ஆண்டுகள் பாஸ்போர்ட் பிரிவில் பணியாற்றிய இந்த வெளியுறவுத்துறை அதிகாரி, வேண்டுமென்றே இந்த தக.வலை ( இரண்டு பாஸ்போர்ட்கள்) மறைத்துள்ளார். இவருடைய இந்த செயல் அமைச்சகத்துக்கு கடுமையான கவலையை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகளின் விசாவுக்கு பதிலாகவே அமெரிக்க பாஸ்போர்ட்களைப் பெற்றதாக தேவயானி வாதிட்டுள்ளார். அதை அமைச்சரகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது. அமெரிக்க விசா பெறுவதில் சிரமம் இருந்திருந்தால் அதை அமைச்சகத்திடம் அவர் தெரிவித்திருக்க வேண்டும்; மாறாக நேர்மையற்ற வழியில் செயல்பட்டதால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு பதில் மனுவில் குறிப்படப்பட்டுள்ளது.
தினமலர் செய்தி ஜூலை 21 2015



தினமலர் செய்தி ஜூலை 21 2015




இவ்வளவு  பொய்யும் புரட்டும், பித்தலாட்டமும்  இவ்வளவு கல்விகற்றும் போக வில்லையே.  இவர்கள் வகிக்கின்ற உயர்ந்த பதவியின் காரணமாக வரக்கூடிய  சுயமரியாதை, கௌரவம், கண்ணியம் என்பதெல்லாம் கிடையாதா ?. செய்வதையும் செய்து விட்டு கோர்ட்டுக்கும் போகத்துணியும் இவர்களை  எந்த இனத்தில் சேர்ப்பது, என்ன செய்ய வேண்டும் !!!!!!


இறைவா  இந்த மாதிரியான  பிணம்தின்னிகளின் வாய் மாய்மாலங்களை  விளங்கிக்கொள்ளும் அறிவை  எம் போன்ற பாமர ஜனங்களுக்கு தருவாயாக  சர்வ சக்தியுள்ள பரம் பொருளே   என்று வேண்டுவதை தவிர  வேறொன்றும் எனக்கு தோன்றவில்லை  



Friday, July 17, 2015

பில்லியனராக " பயத்தை " முதலீடாக கொண்ட சாதனை பெண்ணின் கதை

அமெரிக்க  கலிபோர்னியா  மாநிலத்தின் ப்ரிமொண்ட் என்ற ஒரு நகரில்  வேட்டி (கைலி ) கட்டி வெட்டியாய் கூடி, உண்டு, களித்து, அரசியலும்  சினிமாவும் பேசி,  அலப்பரை செய்ய வென்று ஒரு  வெட்டி சங்கம் இருக்கிறது.

       பெயர் தான் வெட்டி சங்கம்,  உறுப்பினர்கள் வெட்டிகளல்ல.  இடையிடையே  சமயங்களில் சில வெட்டியல்லா விசயங்களும்  மாட்டி  வதை படுவதுண்டு.   நண்பர் ஒருவர்  புதிதாய் ஹை ஸ்கூல் முடித்த  தன  பையனை, கல்லூரியில் சேர்க்காமல்,  சிறிய கடை  ஒன்று வைத்து கொடுத்துவிட்டார், படிக்க அனுப்ப வில்லை. ஆளாளுக்கு அவரை  " படிக்க வைக்காதது தவறு,"  " சின்ன பையனை இப்படி செய்யக்கூடாது " என்று பல குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் சொல்லி  குதறி விட்டார்கள்..

        நண்பர் பொறுமையாக, மற்ற நண்பர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து நீங்கள் என்ன படித்தீர்கள் என்று கேட்டார்.  அவர்களும்  நான், MCA , Btech , civil ,என்று அவரவர் படித்ததை சொன்னார்கள். எல்லாவற்றையும்   கேட்டு விட்டு  பேச  தொடங்கினார் .

 .               படிக்கும் போது என்னென்னவோ கனவுகள் கண்டு, போட்டா போட்டிக்கிடையே  விரும்பி தேர்ந்தெடுத்து   கஷ்டப்பட்டு படித்து விட்டு இப்ப என்ன செய்கிறீர்கள்,   படித்த துறையில் சாதிக்காமல், அந்த துறையையே  கூட  துறந்து விட்டு,  பணம் சம்பாதிக்க வென்று  இரவு பகல் பாராமல் உழைக்கிறீர்கள்.   6 மாதமோ ஒரு வருடமோ செலவு செய்து படித்த கம்ப்யூட்டர் டிப்ளமாவின்  காரணமாக இங்கு  வந்து வேலை செய்கிறீர்கள்,  நீண்ட காலமாக இங்கே இருப்பவர்கள்  சேமித்த   பணத்தை, மளிகை கடையில் முதலீடு செய்வோமா ?, ஹோட்டலில் முதலீடு செய்வோமா ?  என்று சிந்திக்கிறீர்கள்.  தங்கள் படித்த துறையில் ஏதாவது சாதிப்போம் என்று யாராவது நினைக்கிறீர்களா?. உங்களை போன்ற ஆட்களை வைத்து தான் இங்கே பெரிய பெரிய கம்பனி காரர்களெல்லாம் பில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறான். பொதுவாக எல்லோரும் உங்களை   கம்ப்யுடர் எஞ்சினீர் என்று அழைத்து கொள்கிறீர்கள்.

             என்னை பொருத்தவரை, ப்ரொபெசன்ல் டிகிரி படித்தவர்கள்  எந்த துறையில்  படிக்கிறார்களோ, அத்துறையில்  சாதனை  படைக்க  வேண்டும்,  பெற்றோர்  சிரமப்பட்டு   படிக்க செலவு செய்கின்ற  தொகையை  வீண்   விரயம் செய்யாமல்,  காலா காலத்தில் சம்பாதிக்க தொடங்கி பெற்றோருக்கு உதவுவதே உத்தமம் , நானும் பள்ளிக்கு,  கல்லூரிக்கு போகிறேன் பேர்வழி என்று காலத்தை வீணாக்க கூடாது. என் மகன்   சரியாக    படிக்க வில்லை, இப்பவே  தொழில்  செய்ய  தொடங்கினால்,   நாளடைவில்  புதிய புதிய   உத்திகள்,  அவனுகே  சுயமாக தோன்றக்கூடும்.  அப்பொழுது  அவன்  இருக்கும்  துறையிலேயே  அவன்  பெரியாளாக  வரக்கூடிய  வாய்ப்புக்கள் உண்டு.  டாக்டராகவோ, எஞ்சினியராகவோ அல்லது வேறு பல துறை நிபுணராகவோ ஆக வேண்டும் என்று நினைப்பதின் மூல காரணமே பணம் சம்பாதிப்பது தான் என்றார் . எல்லா  செயல்களுக்கும்   மூல  நோக்கம்  பணம் தான் என்றார்,  அதுதான். சரியாகவும் படுகிறது.

                 மற்ற நண்பர்கள் யாரும் வாயே  திறக்க  வில்லை.படிப்பு  என்பது  மிகவும்  அவசியம்  என்பதில்  மாற்றுகருத்தில்லை, ஆனால் சாதனைக்கு  படிப்பு  அவசியமில்லை . பல எடுத்துக்காட்டுகள் நமக்கெல்லாம் தெரிந்து இருந்தாலும்,  இங்கே சமீபத்திய ஒன்றை  பாருங்கள்.

                 பெற்றோர்களின் வேலை காரணத்தால் பல மாநிலங்களுக்கும், சில நாடுகளுக்கும் சிறு வயதிலேயே சென்று வந்திருக்கும் 30 வயதை தாண்டாத  இளம் பெண், எலிசபெத் ஹோல்மேஸ். இன்றைய  தேதியில்  $4.6 பிலியன்  நிகர  சொத்து மதிப்பு பெற்றுருக்கிறார்.சுய முயற்சியால் உருவான  உலகின் முதல்  இளம் பெண் பில்லியனர் என்ற தகுதியை  அடைந்திருக்கிறார்.

                 சீனாவில் இளம் பெண்ணாக இருந்த காலத்தில்  C++   சாப்ட் வேரை, சீன பள்ளிகளுக்கு சப்ளை செய்து இருக்கிறார். ஒருமுறை  அவரது தந்தைக்கு எழுதிய கடிதத்தில்

      "  நான் வாழ்கையில் எதாவது புதிதாக ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன், அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால், மனித சமுதாயமே இதுபோன்ற ஒன்றை கண்டுபிடிக்க  முடியுமா என்று நினைக்கின்ற ஒன்றை கண்டுபிடிப்பது தான்  "  என்பதாக.
                 கிறிஸ்டியன் ஹோல்மேஸ்  என்ற தன தாத்தாவின்  அடியொற்றி  தானும் ஒரு டாக்டராக  வேண்டும் என்ற நோக்கத்துடன் படிக்க தொடங்கிய அவரை,  ஊசியை கண்டாலே குலை நடுங்குகின்ற அவரது மனநிலை,  கெமிகல் எஞ்சினியராக மாற வைக்கிறது. ஆனால் அவரது வாழ்க்கை பாதையையே மாற்றிய  அதே   ஊசி பற்றிய மனநிலைதான்,  ஒரு பெரிய பயோ டெக் கம்பனியை உருவாக்கி  அதன்  மூலம்   பில்லியனர் ஆகும்  வாய்ப்பையும் உண்டாக்கி  இருக்கிறது.

                 2003 இல் உலக புகழ் பெற்ற ஸ்டான்போர்ட்  யுனிவசிட்டியில் முதல் வருடத்திலேயே, பிரசிடன்ட் ஸ்காலர்  என்ற தகுதியுடன்   $  3000  மாத உதவித்தொகை  பெற்று, கெமிகல் எஞ்சிநீரிங்க்கில் ஆய்வை தொடங்குகிறார்.

                 முதல் செமஸ்டர் முடியுமுன்பே  அவரது பேராசிரியர் சந்நிங் ராபர்ட்சன்  என்பவரிடம்,  ஒரு கம்பனி  ஆரம்பிக்கலாம் வருகிறீர்களா ? என்று அழைப்பு விடுத்து, அவரது  வழிகாட்டுதலுடன் கம்பனியை ஆரம்பிக்கிறார். இன்று " தேரநோஸ் "என்ற  பெயரில் பிரபலமாக இருக்கிறது.   அதே கால கட்டத்தில்  இரத்தத்தில் செலுத்தப்படுகிற மருந்தின் அளவை கணக்கிடுகிற,  அணிந்து கொள்கிற கருவி ஒன்றை கண்டுபிடித்து, காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

                  நம்மை போன்ற சாதாரண ஆட்கள் புரிந்து கொள்வது மாதிரி ஒன்றை சொல்வதென்றால் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய சொல்லும்போது,  கிளினிகல் லேப் களில் இரத்தம் எடுக்கின்ற அளவைத்தான் பார்த்திருப்பீர்களே. பல சோதனைகள் என்றால் எவ்வளவு இரத்தம் எடுக்க வேண்டியிருக்கும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  எலிசபெத் உருவாக்கியிருக்கும் முறையில் எந்த சோதனையாக இருந்தாலும், எத்தனை சோதனையாக இருந்தாலும் அதற்கு  ஒரு சொட்டு இரத்தம் போதும், அதுவும் கூட ஒரு " பின் "  குத்துவதால் வரும் இரத்தமே போதுமானது. இது கிளினிகல் டெக்னாலஜியில் மைல் கல் என்பதாக சொல்கிறார்கள்.

                   சோதனைக்கு ஆகும் நேரம், இரத்த அளவு, செலவு எல்லாமே தற்பொழுது நடைமுறையில் உள்ளதை விட  4, 5 மடங்கு குறைவு. இம்முறை இன்னும் எல்லா இடங்களிலும் வர வில்லை காரணம்,  விஞ்ஞானிகள்  எல்லோரும் எப்படி சோதனை செய்கிறாய் என்று எங்களுக்கு  சொல் நாங்கள் அங்கீகாரம் தருகிறோம் என்கிறார்கள், எலிசபெத்தோ  உங்கள் அங்கீகாரம் எனக்கு தேவையில்லை, FDA வில் விவரம் சொல்லி இருக்கிறேன், அவர்களின் அங்கீகாரம்  இருக்கிறது அது போதும் என்கிறார்.  தற்பொழுது அமெரிக்காவின்  56 மாநிலகளில்  செயல் பட  " தேரநோஸ் " க்கு   அனுமதி கிடைத்திருக்கிறது. இந்தியாவிற்கு வர சில காலம் பிடிக்கும் என   நினைக்கிறேன் .

                  தள தள வென பொன்னிறத்துடன், அறிவு பளிச்சிடும் கண்களுடன் விளங்கும் எலிசபெத்  தான் ஒரு " வேகன் "என்பதாக சொல்லிக்கொள்கிறார். மணிக்கொருமுறை  காய்கறி, கீரை சாரு அருந்துகிறார்.     

                  அமெரிக்க மண்ணிலே பிறந்து,   டேடிங் போகாமல், டிவி இல்லாமல், பத்தாண்டுகளாக விடுமுறையே எடுக்காமல் இருப்பதாக சொல்கிறார்.  பயோ டெக் கம்பனி ஆரம்பித்து, 10 ஆண்டுகளுக்கு உள்ளாக  இன்றைய தேதிக்கு 84 காப்புரிமைகளை பெற்று இருக்கிறார்.   இப்படி ஒரே குறிக்கோளுடன், இலக்கை தவிர வேறொன்றையும் எண்ணாததாலொ  என்னவோ இவ்வளவு  குறுகிய காலத்தில் இமாலய சாதனையை செய்ய முடிந்தது போலும்.


            

Monday, July 6, 2015

சொத்து சேர்க்கலாம் வாருங்கள் - 5

நம்மிடையே  இன்றும் வழக்கத்தில் இருக்கிற பழமொழி "  ஒன்னு  பொன்னிலே போடணும் இல்லையென்றால் மண்ணிலே போடணும்  "  என்பதாக.  மேலோட்டமாக பார்க்கும் போது அது சரியென்றே தோன்றும்.  ஒரு 10 வருட  கால இடைவெளியில்   தங்கம் விற்ற விலையையும். இன்று  விற்கிற விலையையும் வைத்து  காம்பவுண்டிங் முறையில் கணக்கிட்டு பார்க்கும் போது, கிடைக்கின்ற முடிவு  தங்கத்தின் மரியாதையை  மங்க செய்வதாக தான் இருக்கிறது.


இன்றைய கால பெரும்பாலான  பொருளாதார நிபுணர்களும் மேதைகளும்  கூட,  தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஆதரவாக இல்லை.  உலகமெல்லாம் அறிந்த  வாறன் பப்பெட் கூட முழுக்க முழுக்க, தங்கத்தில் முதலீடு செய்வதற்கு எதிரானவராகவே இருக்கிறார்.   சமீப காலமாக சிலர்,  நிகர சொத்து மதிப்பில்  5 % லிருந்து 7%  வரை தங்கமாக வைத்திருக்கலாம் என்பதாக  பரிந்துரை செய்கிறார்கள்.


மேலை நாடுகளில்,  தங்கத்தில் பரிவர்த்தனை செய்வது என்பது, ஒரு செலவு மிகுந்த செயல்.  எளிதில் பணமாக்க முடியாது,  நமது நாட்டில் அப்படியல்ல.  சமுதாய அந்தஸ்திற்கு ஒரு அடையாளமாக இருப்பதாலும்,  நினைத்த மாத்திரத்தில் பணம் புரட்டக்கூடிய தன்மையாலும், தங்கம் வாங்கப்படுகிறது.  தங்கம்  ஒரு  முதலீடு என்பதைவிட சேமிப்பு  என்று  கருதியே  வாங்கப்படுகிறது.  நாமும் சொத்து சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது,  முதலுக்கு மோசம் வந்து விடாமல் இருக்க,  இடைக்காலத்தில்  எதிர்படக்கூடிய எதிர்பாரா செலவுகளை  சமாளிக்க வென்று சிறு தொகையை, வங்கிகளில் ரொக்கமாக  வைப்பதை காட்டிலும், தங்கமாக  வைப்பது லாபகரமாக  இருக்கும் என்பதால், அதைப்பற்றி இங்கு நாமபார்க்கலாம்.                                                                                           

காசு விரையமாகாமல்  இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எக்காலத்திலும் புதிதாக நகைகளோ, தங்க காசுகளோ வாங்காதீர்கள்.  பேங்குகளிலோ,  போஸ்ட்ஆபீஸ்களிலோ, தங்க காசுகள் வாங்கும் பொது,  செய்கூலி மற்றும் பிரிமியம் என்று சொல்லி,  நடப்பு  தங்க விலையுடன்,  ஒரு தொகை சேர்த்து விலை சொல்வார்கள்.  அந்த தொகை, அப்படியே நீங்கள் விற்க செல்லும் போது அம்போ!!!.   நீங்கள் விற்ற அடுத்த நிமிசமே,  வேறொரு வாடிக்கையாளருக்கு, அதே தங்க நாணயத்தை செய்கூலி பிரிமியத்துடன் விற்பதை காணலாம்.


வாங்குகிறது  தான் வாங்குகிறோம்,  புதிய டிசைனில் நகைகள் வாங்கினால்,  வீட்டுக்கார அம்மாவையும்  சந்தோஷ படுத்தலாமே என்று நினைக்கும் கனவான்களின்  கவனத்திற்கு ,   நல்ல பெயர் பெற்ற   நகைக்கடையில்   (அப்படி யாரும் இருக்கிறார்களா ?. !!,  இதற்கென்று ஒரு இடுகை பின்பு வரலாம் ) வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  நாளை  அவசர தேவை என்று அவர்களிடம் விற்க போனால், நீங்கள் ஏற்கனவே கொடுத்த  செய்கூலி, சேதாரம் மற்றும்  தங்கத்தின் நடப்பு விலையில் இருந்து  20 % லிருந்து 25 % வரை கபளீகரம் செய்யப்படும்.  ( உங்களுடைய  நம்பிக்கையை  பெறுவதற்காக,  வாங்குமுன் சொல்லப்பட்ட,  எப்ப திருப்பி கொண்டுவந்தாலும்  அன்றைய மார்கட் விலையில்  வாங்கி கொள்வோம் என்றவர்கள்  கூட, இதையே செய்வார்கள் ).  இப்பொழுது  அரசாங்கம்,  ஹால் மார்க்  ஒவ்வொரு நகையிலும் இடவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. சில கடைகளில் ஹால்மார்க் இட்ட நகைகளை விற்கிறார்கள்,  ஹால் மார்க்கில் குறிப்பிடும்  மாற்று இருக்குமா ?,  படைத்தவனுக்கே வெளிச்சம்.


என்ன கரச்சலாய் போச்சு, எங்குதான் வாங்குவது என்று யோசிக்கிறீர்களா?. உடனடியான சேமிப்பு , ஒரு பவுனிற்கு ( 8 கிராம் ) குறைவாக  ரூ 1,000 தில் இருந்து ரூ 1,500 வரை சேமிப்பு செய்ய முடியும்.  (இந்த வாய்ப்பு மேலை நாட்டவர்களுக்கு கிடையாது.!!!! ).   நம் சொத்து சேர்ப்பது  என்பதின்  அடிப்படையே சேமிப்பு தானே.  மேலை நாடுகளில் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டால் அது அப்படியே ஒரே இடத்தில்  இருக்கும்,  நம் தேசத்தில்  அப்படியல்ல,  ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற தங்கம்,  பெரும்பாலும் நகையாகத்தான் இருக்கும்  அதுவும்,  ஒரே இடத்தில் இல்லாமல்,  கை  மாறிக்கொண்டே இருக்கும். இதற்கு  நமக்கு மிகவும் உதவுபவர்கள், நம் தாய்க்குலங்கள் தான். அதிலும் குறிப்பாக நம்  இஸ்லாமிய சகோதரிகள் தான்.  இவர்களின்   பெருந்தன்மையால்  தான்,  நகைக்கடைகாரர்கள், ஊருக்கு ஊர் புதிய, புதிய கிளைகளையும்,  சிறிய ஊர்களில்  இருக்கிற, பொற்கொல்லர்கள்,  மாடி வீடுகள் கட்டுவதும்,  இளமையை வளைகுடா நாடுகளின் வெப்பத்தில் ஆவியாக்கி, உழைத்து  ஓடாய்  போன கணவன்மார்  தலையில் துண்டு போட்டுக்கொள்வதும்.


நாளை  தேவைக்கு என்று,  நாம் விற்கும் போது  நஷ்டம் அடையாமல் இருக்க,  கவனிக்க வேண்டிய  மிக முக்கியமான விஷயம், தங்கத்தின் மாற்றுதான்.  நமது நாட்டில் கிடைக்கின்ற தங்க நாணயமாக  இருந்தாலும்,  ஹால் மார்க் என்று சொல்லப் படுகிற,  தங்கத்தின் தரத்திற்கு இடப்படுகிற, கேரட் மார்க்  இடப்பட்ட நகைகளாக  இருந்தாலும், அவற்றின் தரத்திற்கு  எந்த கேரண்டியும்  சொல்லமுடியாது.  அரபு நாடுகளில் இருந்து  வருகிற தங்கம்,  அது என்ன உருவில் இருந்தாலும்,  ஹால் மார்க்கில் சொல்லப்பட்டிருக்கிற மாற்று அப்படியே இருக்கும்,  அதே போன்று சிங்கப்பூரில் இருந்து வரும் நகை களும், மாற்று குறையாமல் இருக்கும்.

இன்னொரு விசயத்தையும் தெளிவாக்கி கொள்வது மிக அவசியம், தங்கத்தில், புதியது  பழயது என்பதெல்லாம் இல்லை, உருக்கினால் மாற்று ஏற்கனவே இருந்ததைவிட கூடுமே தவிர குறையாது !!!!!.  வியாபாரிகள் சொல்வதை நம்பாதீர்கள்.

இன்று எல்லா ஊர்களிலேயும் வீட்டுக்கு ஒருவராவது வளைகுடா நாடுகளில் இருப்பார்கள், சில ஊர்களில் ஒவ்வொரு வீட்டிலும் 2, 3 பேர் கூட இருப்பார்கள்.  ஒவ்வொரு முறை ஊர் வரும்போதும், தங்கம் வாங்கிவர தவறுவதே இல்லை.  இவர்கள் வீட்டில் உள்ள பெண்களிடம்  கொடுத்துவிட்டு திரும்ப போய் விடுவார்கள்.  அந்தந்த வீடுகளின்  பொருளாதாரமே இப்பெண்களின் கையில் தான்.  நகை மோகம்  கொண்ட இவர்கள் அடிக்கடி டிசைன் மாற்று கிறேன்  பேர்வழி என்று  நம்பி  பழைய ( ? )நகைகளை கொடுத்து ஏமாறுவது , நாம் மேலே கண்டது  போன்ற நபர்களிடம் தான். 

இப்படிப்பட்டவர்களும்,  மற்றும் பலதரப்பட்ட தேவைகளுக்காக நகை விற்போரும்,  நமது அண்டை  வீட்டிலோ, தெருவிலோ, ஊரிலோ  குடியிருப்பவர்களாக தான் இருப்பார்கள்.  இவர்களிடம் இருந்து தான் வாங்க வேண்டும்.  நகை விற்கிறோம் என்பவர்களின் நகையை, ஒன்றுக்கு இரண்டு பொற்கொல்லர்களிடமொ,  நகைகடைகாரர்களிடமோ ,  நகை விற்க போவதாக சொல்லி விலை கேட்டு,  அவர்கள்  தருவதாக  சொல்லும் விலையை விட, உருப்படிக்கு  ரூ 100, ரூ 200 கூடுதலாக கொடுத்து வாங்குங்கள். நகையின் தோற்றத்தை பொறுத்து இன்னும் சிறிது கூடுதலாக கொடுத்தாலும் கூட உங்களுக்கு நட்டம் வராது.  தயவு செய்து வயிற்றில் அடிப்பது போன்று  விலை கேட்டு வாங்காதீர்கள்.  வயிற்றெரிச்சலுக்கு இதில் என்ன  இருக்கிறது என்று நினைக்காதீர்கள், எந்த காரணத்திற்காக  விற்றாலும் யாரும் எதையும் அவசரத்திற்கு விற்கும்போது சந்தோசமாக விற்பதில்லை.  பிற்காலத்தில் செல்வம் சேர்ந்த பிறகு, அதற்கும் உங்களுக்கும் இருக்கிற உறவு,  எப்படியெல்லாம் செல்வம் சேர்த்தீர்கள் என்பதை  பொறுத்து தான் இருக்கும், இதை வார்த்தைகளால்  விளக்க முடியாது, அனுபவத்தில் தான் விளங்கமுடியும் .

மைக்ரோ சாப்டின் நிறுவனர் பில் கேட்ஸ்,  உலகின்  முதல் பணக்காரர்,  நீங்கள் உங்களுடைய செல்வத்தை  பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட  போது,  நான் ஏன் இவ்வளவு பணம் சம்பதிதேனோ ?.  என்று நினைப்பதாக  சொல்கிறார்.   காரணம்  ஆரம்ப  காலத்தில் எத்தனை தொழில் போட்டியாளர்களை நசுக்கி இருப்பார் ?. நசுக்க வேண்டும் என்றல்ல, தொழில் திறமை என்று வைத்துக்கொள்ளுங்களேன்!!!. இத்துணைக்கும்  பலகோடி டாலர்களை தான தருமங்களுக்கு அள்ளி இறைக்கிறார், அவரையொத்த  பணக்காரர்கள்  பலரை தூண்டி, அவரவர் வாழ்நாளில்  சம்பாதித்த  சொத்துக்களில்  முக்கால் வாசிக்கும்  மேல் தருமத்திற்கு எழுதிகொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பிற்காலத்தில் நாமும் கூட இப்படிப்பட்ட தரும  சிந்தை உடையவராகும்  வாய்ப்பை, இறைவன் நாடினால், அடையலாம். 

தங்க நாணயங்களையும் இவ்வாறே,  நடப்பு சந்தை  விலையில்  இருந்து  5 % அளவில் குறைத்து வாங்கலாம்.

எதிர்பாரா, அவசர  தேவைகள்  என்பதாக ஒரு விஷயத்தை சொல்லி, தொட்டு விட்டு,  விட்டு விட்டோம், இதில் வைத்திய  செலவுகள்,  வாகனம் இருந்தால் பராமரிப்பு செலவுகள், கல்யாண சீர் செனத்தி  இன்னும் இதுபோன்ற செலவுகள். இதற்காக,  நமது  3 லிருந்து 5 மாத செலவு தொகையை ஒதுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  இதற்கென்று ஒரு சிறு தொகையை மாதா மாதம்  ஒதுக்கு பவர்கள்,  இத்தொகை தங்கமாக இருக்கும் பட்சத்தில் வேறொரு லாபம் இருக்கிறது  பின்னால் அதுபற்றி  பார்க்கலாம்.

இன்னும் அடுத்தடுத்த  தொடர்களில்  மற்ற முதலீடு முறைகளை பற்றி பார்த்து கொண்டே, நம் இலக்கை அடைய சிறந்த முறையையும் இறைவன் நாடினால் தொடர்ந்து பார்க்கலாம்........       


  

Saturday, July 4, 2015

பங்குசந்தை வீழ்ச்சி இன்று சீனா, நாளை இந்தியாவா?

ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பும், தற்பொழுதும்  உள்ள நிலைமைகளையும், வசதிகளையும்  யோசித்து பார்தோமானால்,  மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தென்படுகிறது,   3 மணி நேர விமான பயண தூரத்தில்  உள்ள நாடுகளில் உள்ள உறவினர்களுடன், முன்பெல்லாம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் பல மணி நேரங்கள் ஆகும், சில சமயங்களில், பல நாட்கள் கூட பிடிக்கும். ஆனால் இன்று  தொழில்நுட்ப  வளர்ச்சியால், உலகின் ஒரு முனையில் இருப்பவர் மறு முனையில் இருப்பவருடன் ஒரு சில நொடிகளிலேயே தொடர்பு கொள்ள முடிகிறது,  நாளுக்கு நாள் உலகம் சுருங்கி கொண்டே போவது  போல் தெரிகிறது.
                    உலகின் ஒரு பகுதி உறங்கிக்கொண்டிருக்கும் போது மற்றொரு பகுதி சுறு சுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறது.  இதன் காரணமாகவே, தங்க சந்தையும், பங்கு சந்தையும் அதற்கேற்ப மாறிக்கொள்கிறது.  குறிப்பாக வெவ்வேறு நாட்டு  பங்கு சந்தை களின்  ஏற்ற இறக்கங்கள் உடனுக்குடன் மற்ற  நாடுகளின் சந்தைகளில்  தாக்கத்தை  ஏற்படுத்தும் அளவிற்கு நெருங்கி விட்டன.
                    இந்தியாவும், சீனாவும் பொருளாதார ரீதியில் யார் உலகின் இரண்டாவது  இடத்தை பெறுவது என்பதில் மிக மும்முரமாக இருக்கின்றன.  சீனாவை பொறுத்த வரையில் பொருளாதார  தகவல்கள் எளிதில் கிடைப்பதுமில்லை, கிடைத்தாலும் முழுதும் நம்பும்படியும்  இருப்பது இல்லை.  இந்தியாவிலோ. அப்படி இப்படி என்று வெறும் வாய் சவடால்கள் தான்  ஊடகங்களால் பரப்பபடுகின்றன.  பழைய கணக்கீடு முறைகளை மாற்றி, புதிய கணக்கீட்டு முறைகளால் சாதகமான தகவல்கள்  பெறப்பட்டு, வளர்ச்சி அடைவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. உள்நாட்டில் இருப்பவர்களுக்கு தெரியும், நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று.
              உலக அரங்கில் இவ்விரு நாடுகளை பற்றி  பொருளாதார  வல்லுனர்கள் ( ? ), மேதைகள் ( ?) என்று சொல்லிக்கொள்வோர் பரப்பி வருகிற பல்வேறு ஊடக செய்திகள் கணக்கின்றி  காண கிடக்கின்றன.
               கடந்த ஒரு வருட காலமாக சீனாவின் பொருளாதார செயல்பாடுகள் பற்றி , அந்நாட்டின் அரசு ஊடகங்கள் வேண்டும் என்றே, இட்டுக்கட்டி  பரப்பிய  தகவல்களால், பங்கு சந்தையில், பங்குகளின் மதிப்பு இரண்டு மடங்காகி விட்டது. கடந்த ஜூன் 12 இல் சந்தை உச்சத்தை தொட்டது.  இந்த வெள்ளிகிழமை ( ஜூன் 26 ) அன்று ஒருநாளின் மிகப்பெரிய சரிவான 7 % ஐ சந்தித்திருக்கிறது. கடந்த 10 வருடத்தில் இவ்வாறான சரிவை  சந்தை சந்தித்ததில்லை என்றும் சொல்லப்படுகிறது. கடந்த வருட உச்சத்தில் இருந்து, பங்குகளின் மதிப்பு  சிறுக சிறுக குறைந்து,   இன்று வரை19 % சரிந்திருக்கிறது.  முதலீட்டாளர்கள் சந்தையில் இருந்து வெளியேற வழி தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
                கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் சீன பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதாக  கணிக்கப்பட்ட போதும். கடந்த காலாண்டில்  பொருளாதார வளர்ச்சி  விகிதம் 7 % ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.  இது  2009 வது வருடத்திற்கு பிறகு ஏற்பட்ட மிக குறைவான காலாண்டு வளச்சி விகிதம் என்று  சொல்லப் படுகிறது.
                பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவாக இருந்தாலும், அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள், பல்வேறு பட்ட பொருளாதார தகவல்களை  பரப்பி, சீன முதலீட்டாலர்களை, பங்குகளில்  முதலீடு செய்ய ஆர்வமூட்டின. பலபேர், பேங்குகளில் கடன் வாங்கி, குறுகிய காலத்தில் லாபமீட்டி விடலாம் எனக்கருதி முதலீடு செய்துள்ளனர்.
                 இதே கால கட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு, புதிய கம்பனிகள் பங்கு சந்தையை  முற்றுகை இட்டுள்ளன. அப்படி திரட்டிய தொகையை, தாங்கள் முன் பெற்றிருந்த கடனை அடைக்க பயன் படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வருடத்தின், முதல் ஆறுமாதங்களில் உலகிலேயே மிக அதிகமான  புதிய  வெளியீடுகள் வெளிவந்து சாங்காய் exchange முன்னணியில் இருந்தது. 78 கம்பனிகள் சேர் வெளியிட்டு $ 16.6 பிலியன் திரட்டி முதலிடத்திலும்,  31 கம்பனிகள் சேர்  வெளியிட்டு  $16 பிலியன் திரட்டி  ஹாங்காங்கு 2 ஆம் இடத்திலும், 112 வெளியீடுகளில்  $ 7 பில்லியன் திரட்டி, ஷென்சென் 5 வது இடத்தையும் பிடித்தன
                இப்படி கணக்கற்று வந்த, புதிய வெளி ஈடு களும், பங்குகளின் விலை சரிவிற்கு ஒரு முக்கிய காரணி  என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.

இந்த  நிலைமையை கண்ட சீன அரசு, பேங்குகளின்  லோன் கொடுக்கல் வாங்கலுக்கு கடுமையான கெடு பிடிகளை ஏற்படுத்தியுள்ளது.  பங்கு சந்தையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள், இவ்வாறான நேரங்களில் தான் பங்குகளை வாங்கி குவிப்பார்கள்,  அதிலும்  குறிப்பாக வெளிநாட்டு  முதலீட்டாளர்கள்.  கடந்த ஆண்டுதான் சீன அரசு,  வெளிநாட்டவர்களுக்கு, தன பங்கு சந்தையை திறந்தது, அதுவும் நேரடியாக முதலீடு செய்ய முடியாது,  ஹான்காங் வழியாக தான் செய்ய முடியும். அங்கிருந்து முதலீடு செய்ய வேண்டுமானாலும், விசேச அனுமதி பெறவேண்டும்.
               முதலீட்டுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஞாயமான அளவு சீன சந்தையில் அமெரிக்க முதலீடு இருக்கிறது.  கடந்த வருட பங்கு சந்தையின் அபரிமிதமான சுறுசுறுப்பு,  ஏதோ ஏட கூடமாக நடக்கப் போகிறது என்று உணர்ந்தது போல், இந்த வருடத்தில் மட்டும் $ 22 பில்லியன் அளவிற்கு முதலீடு வெளியேறி இருக்கிறது,  அதிலும் குறிப்பாக இந்த மாதத்தில் மட்டும் $ 7 பில்லியன் வெளிஏறி  உள்ளது. என்பதாக இ.பி.எப்,ஆர். குளோபல் என்ற ரிசர்ச் கம்பனி டைரக்டர்  தெரிவிக்கிறார்.
             சீன சந்தையின் இந்த சரிவால் பெரிதும் பாதிக்கபட்டிருப்பது, சிறு முதலீட் டாலர்கள் தான். இந்திய சந்தையும், உண்மையான வளர்ச்சி காரணிகள் இன்றி, ஊகத்தின் அடிப்படையில் உயர்ந்துள்ள சந்தை, எவ்வளவு காலம் சரியாமல் தாக்கு பிடிக்குமோ?. இவ்வாறான நிலைமைகளில் அதிகம் பாதிக்கப்படுவது சிறு முதலீட்டாளர்கள் தான். கடன் வாங்கி முதலீடு செய்தவர்கள் கவனமாக இருக்கட்டும் 

Friday, July 3, 2015

வாறன் பப்பெடின் 3 வெற்றி ரகசியங்கள்

நம்மில் பெரும்போலோர், குறிப்பாக வாழ்கையில் கடை நிலையில் இருந்து  வளர நினைப்பவர்கள், பலவாறான  கஷ்டங்களும், துன்பங்களும் தமக்கு மட்டுமே நடப்பதாக நினைப்பதுண்டு. துன்பங்கள், துயரங்கள்  எல்லோருடைய  வாழ்கையிலும் நடப்பதுதான், எல்லோருக்கும்  பொதுவான ஒரே விஷயம் என்ன வென்றால் , ஒவ்வொருவர்  வாழ்க்கையில் அவரரவர் சூழ்நிலைக்கு ஏற்ப  கூடுதல் குறைவாக இருக்கும்.

நமக்கு முன்பே பலகோடி மக்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் ,  நம்மைப்போலவே அவர்களும் துன்பங்கள் அனுபவித்து, வெற்றியோ, தோல்வியோ அடைந்து மறைந்து இருக்கிறார்கள். எல்லா வகையான துறைகளில் இருந்தும் உருவாகியிருக்கிறார்கள்.  இந்த கால கட்டத்தில், நாம் அனுபவிக்கின்ற வசதிகளெல்லாம், பலருடைய  துன்பத்தில்  இருந்து திரண்டு உருவான, வெற்றிக்கனிதான்.

நாமும் சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கு, மேற்கண்ட வகையான மக்களின் வாழ்கையில் பெரும் படிப்பினை இருக்கிறது.  தாம் பெற்ற வெற்றிக்கனி எப்படி, தமக்கு பின்வரும் சந்ததியினர்க்கு உபயோகமாகவேண்டும் என்று உருவாக்கி வைத்திருக்கிறார் களோ , அதே போன்று தத்தமது    வாழ்க்கை நிகழ்வுகளை  பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்  அவற்றை   படித்தால்,  நல்ல பல படிப்பினைகளை நமக்கு கிடைக்க  கூடும்.

தொலை தொடர்பு சாதனங்களால்  மிகவும் குறுகிவிட்ட உலகத்தில் வாழ்கின்ற நாம், உலகின் பல்வேறு தேசங்களில் வாழ்ந்து  கொடிருக்கிற சாதனையாளர்கள் பற்றி அன்றாடம் கேள்விப்பட்டு கொண்டிருக்கிறோம்,   அந்த சாதனையாளர்கள்  தம் வாழ்கையில், செயல் பட்ட விதத்தில் நாமும் செயல் பட்டால், வெற்றிக்கனியை பறிக்கக்கூடிய வாய்ப்பு நமக்கும் கிடைக்க கூடும். அவ்வகையில்  உலக பணக்காரர்களின் வரிசையில்  இருக்கும்  வாறன் பப்பே,  1950 களில்  வெறும்  $10,000 முதலீட்டில் இருந்து தொடங்கி,  இன்றைக்கு  $ 70 பில்லியன் என்ற  அளவில்  பில்லியனராகி இருக்கும்,  அவரை நேரில் கண்டு, பேச்சை கேட்க, வருடம் ஒரு முறை அவர் வாழும் கிராமத்திற்கு  40,000 முதலீட்டாளர்கள்  படை எடுக்கிறார்கள்,   அவருடைய  வெற்றியின் ரகசியங்கள்,  பல்வேறு சமயங்களில் அவரால் சொல்லப்பட்டும், அவரது வாழ்க்கையை  நுணுகி  ஆராய்ச்சி செய்தவர்களின் வாயிலாக கிடைத்த முக்கியமான மூன்று விசயங்களை பார்ப்போம்.
1. வருவாயை பெருக்கி, அதை மறுமுதலீடு செய்வது.
            நெடுங்காலம் நின்று நிலைத்து இருக்கிற கம்பனிகளை கண்டு முதலீடு  செய்வது. அவர் பாணியில் சொல்வதென்றால்
 "  ஒரு  அடி முட்டாள் நிர்வாகம் செய்தால் கூட, மிக சிறப்பாக செயல் படும் கம்பனிகளில்  பங்கு முதலீடு செய்வது,  காரணம் என்றாவது ஒரு நாள் ஒரு முட்டாள் மேனஜராக வரப்போவது உறுதி ".

நெடுங்காலமாக  டிவிடண்ட் தரக்கூடிய கம்பனிகள்,  லாபகரமாக தொடர்ந்து சம்பாதிப்போம் என்ற நம்பிக்கை உடைய யனவாக இருக்கும். வருடக்கடைசியிலோ, வருடமிரு  முறையோ  கிடைக்கும் டிவிடண்டை  அதே கம்பனியிலோ அல்லது வேறு புது கம்பனியிலோ முதலீடு செய்யலாம்.   பங்கு மார்கட்  வீழ்ந்து கிடக்கக்கூடிய காலங்களை  இது மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.
            ஒரு உதாரணம்,  1995 வாக்கில்  பங்கு சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்தது, அப்பொழுது  நாளைய  நிலைமை எப்படியிருக்குமோ  ?  என்று,  பல காலமாக டிவிடண்ட் கொடுத்துவந்த கமபனிகள்   கூட  அவற்றை சிறிது குறைத்தன.  அப்பொழுது  கோகோகோலா  கம்பனி,  வாரனுக்கு  $88 மில்லியன் டிவிடண்டாக கொடுத்தது, இந்த வருடம் சுமார் $ 528 மில்லியன் கொடுக்கப்போகிறது.  கோகோகோலா கம்பனி 57 வருட மாக தொடர்ந்து  டிவிடன்ட் கொடுத்து வருகிறது.

2. சராசரி விலை மதிப்பில் பங்கு முதலீடு செய்வது
             பொதுவாக பொது மக்கள் கம்பனி பங்குகளில் முதலீடு செய்யும்போது. பங்கு விலைகள் அப்படியே இருக்கும் அல்லது விலை குறையும் என்ற நம்பிக்கை இன்றியே  முதலீடு செய்கிறார்கள்.  இன்று வாங்கினால்,  நாளையே   வானளாவ விலை உயரவேனும் என்று எதிர்பார்ப்பில் வாங்குகிறார்கள். ஆனால் பப்பெட் அப்படியல்ல, காரணம்  அவர்  முதலீடு செய்யும் கம்பனிகளை அடிக்கடி மாற்றுபவர் அல்ல.  குறுகிய கால் முதலீடோ, டிறேடிங்கோ  பெரும்பாலும் செய்வதில்லை. எல்லாமே நீண்டகால முதலீடு தான். நீண்ட காலம் என்று சொன்னாலும் நாம் நினைப்பது போல், ஐந்து வருடமோ 10 வருடமோ இல்லை, பல மாமாங்கங்கள். பங்கு சந்தையில் விலை ஏற்ற இறக்கமென்பது   இயற்கையானது.  இன்னும்  உண்மையை சொல்வதென்றால், தான் முதலீடு செய்த கம்பனிகள் விலை இறங்கினால் மகிழ்ச்சி அடைவார்,  காரணம் விலை நன்கு இறங்கும் போது மேலும்  அதிகமாக அதே கம்பனி பங்குகளை வாங்குவார். இப்படி விலை குறைய  காத்திருக்கும் காலமும், பல காலாண்டு  மற்றும் அரையாண்டு அறிக்கை காலங்கள். இப்படி பல நேரங்களில், விலை குறையும் பொது வாங்கி வாங்கி  சேர்த்த பங்குகளின்  சராசரி விலை மிக குறைவான தாகவே இருக்கும்.
                  பப்பெடின் முடிவுகள் எப்போதும் சரியாக இருந்ததா வென்றால்  அதுவும் இல்லை,  அவரும் பல நேரங்களில், இழப்பை சந்தித்திருக்கிறார்.  சமீபத்திய  எடுத்துக்காட்டாக  டெஸ்கோ வை சொல்லலாம்.  இக்கம்பணியை  விற்றதால்  பல மில்லியன்  இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
                  பல ஆண்டு காலமாக, கம்புயுடர் துறையில் ஜாம்பவானாக இருந்த ஐ.பி.எம், அத்துறையில் வியாபார சரிவை  சரிக்கட்ட  கிளவுட் கம்புடிங் போன்ற துறைகளில் கால் பதிக்க துவங்கிய போது,  கம்பனி நிர்வாகமோ,  பங்கு சந்தையோ எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாததால், பங்கு விலை  35% இல்  இருபது 50 % சரிவை சந்தித்தது. பலர் தமது ஷேர்களை விற்றதுடன்,  விற்குமாறு பரிந்துரையும் செய்தனர். இத்துணைக்கும்  12 மாத நிகர பண வருவாய் $ 17 மில்லியனாக இருக்கிறது.  இந்நேரத்தில்  பப்பெட்  $ 40 மில்லியனுக்கு அதில் முதலீடு செய்திருக்கிறார்.  அவருடைய  இன்றைய  சராசரி ஐ.பி.எம். பங்கின்  கொள்முதல்  விலை  25 ஆண்டுகளுக்கு முன்னுள்ள விலையை விட 50% ஆக இருக்கிறது. எண்ணிப்பாருங்கள்,  ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னுள்ள விலையை எட்டினாலே  போதும், அவருடைய முதலீடு எத்தனை மடங்காகும்.   கிட்டத்தட்ட  ஒரு தங்க சுரங்கத்தின்  மேல் அமர்ந்தது போல்  இருக்கிறார்

3. தொண்டனாக இருப்பதை விட தலைவனாகவே இருக்கிறார்.

              அவருடைய வீட்டில் பெரிய நூலகம் இருக்கிறது, அதில்  அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வெளியான  பொருளாதார, பங்கு சந்தை சம்பந்த மான நூற்கள் இருக்கின்றன. நிறைய புத்தகங்கள் படித்தும், ஆங்காங்கே நடக்கும்,  நிதி நிலை சம்பந்தமான கூட்டங்களில் கலந்து கொண்டும், பல்வேறு வகையான, கருத்துக்கலையும்   நுட்பங்களையும் அறிந்து கொண்டாலும்,  தமது முடிவுகளை தானே சீர்தூக்கி பார்த்து எடுப்பவராக இருக்கிறார்.  எவ்வளவு தான் அறிந்தவராக இருந்தாலும், பிறருடைய  பரிந்துரைகளை  ஏற்பதில்லை.
                  அவருடைய  பெர்கஷயர் ஹாதவே யின் ஆரம்ப கால கட்டத்திற்கு சென்று பார்த்தால்,  அவருடைய  இந்த தனி தன்மையை காணலாம். இன்றும் அவருடைய  கம்பனியின் மாதிரியை பலபேர்  பின்பற்றுவதை காணலாம். புதியவர்கள்  அவருடைய அளவிற்கு வளராததன் காரணம், இவர்களுக்கு  பபேயை போல்  அரை நூற்றாண்டு கால அவகாசம் இல்லை.
                 பப்பெட்  கூட்டத்தோடு கோவிந்தா போடுபவராக இல்லை.  பெரும்பாலோரின்  கருத்துக்கு  எதிராக சிந்திப்பவராகவே இருக்கிறார்.  எல்லோரும்  புதிய, புதிய  தொழில் நுட்பங்கள், துறைகள் என்று சிந்தித்து  முதலீடு செய்ய நினைக்கு போது,  பப்பே  பெரும்பாலும்  பல்லாண்டு காலமாக நின்று நிலைத்திருக்கிற தொழில் களிலேயே  முதலீடு செய்பவராக இருக்கிறார். இதற்க்கு ஒரு சமீபத்திய  உதாரணமாக அவர் வாங்கிய  ஹென்ஸ்  என்ற கம்பனியை சொல்லலாம். இந்த கம்பனி கடந்த 90 ஆண்டுகாலமாக  கெச்சப் தயாரித்துக்கொண்டிருக்கிறது.   இன்னொன்று  பி.என்.எஸ்.எப். என்ற ரயில் போக்குவரத்து கம்பனி.  இந்த டிரோணும்,ப்ளைட்டும் சாமான்கள் டெலிவரி செய்யும் காலத்தில், அவர் முதலீடு செய்யும் கம்பனிகளை பார்த்தீர்களா?.  அவருடைய  இந்த கோட்பாடுகளை விமர்சனம்  செய்ய நினைப்பவர்களை,  அவர் முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் வாய் மூட செய்து விடுகிறது. இந்த மாதிரியான முடிவுகள் தான் அவரை தனித்துவ மிக்க  தலைவராக  மிளிர வைத்திருக்கிறது.

இதிலிருந்து  நாம்  கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை.

1. ஆடிக்காற்றிற்கும் அசந்து கொடுக்காத என்பார்களே, அது போன்று  பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு,  ஈடு கொடுத்து நிற்க கூடிய,  பல் துறைகளில் காலூன்றியுல்ல,  பலகாலம் டிவிடன்ட் தந்து கொண்டிருக்கிற கம்பனிகளில் முதலீடு செய்ய முயச்சிப்பது.   கிடைக்கின்ற  டிவிடண்டை  திரும்பவும் முதலீடு செய்வது.

2. ஒரே  நேரத்தில்  கையில் இருப்பதை எல்லாம்  முதலீடு செய்யாமல், சிறுக சிறுக  நல்ல கால இடைவெளியில்  செய்வது.  எந்த கொம்பனாலும் நாளை சந்தையில் என்ன நடக்கு மென்று சொல்ல முடியாது.  கையில் பணம் சேர சேர முதலீடு  செய்ய நினைக்கும் சிறு முதலீட்டாளருக்கு இதுவே ஏற்றதும் கூட.

கடைசியாக ஒன்று, எந்த காலத்திலும் இல்லாமல் இன்றைக்கு  அடுத்தவருடைய  காசுக்கு ஆசைப்படுபவர்கள். கொள்ளையர்கள் நிறைந்த காலமாய் இருக்கிறது.  நாளும் செய்தித்தாள் கலை புரட்டினால்  வித விதமான் ஏமாற்றுக்காரர்கள்.  நிறைய  படித்து அறிந்து கொள்ள முயலுங்கள்.   அதே நேரத்தில் எல்லாம் தெரிந்து கொண்டுதான் செய்ய வேண்டும் என்று இருக்காதீர்கள். யாருடைய  கையிலும் உங்கள் பணத்தை கொடுத்து முதலீடு செய்ய சொல்லாதீர்கள், யாரையும் நம்பாதீர்கள் ( என்னையும் சேர்த்துத்தான் )