ஒரேநாட்டில் பிறந்து, உருண்டு, உழன்ன்று, ஒருமித்து போராடி சுதந்திரம் பெற்று ஒரு சில அரசியல் வாதிகளின் சுய நலத்தினால், இரு வேறு தேசங்களாகி, எதிர் எதிர் துருவங்களாகி, சோற்றுக்கே திண்டாடும் பலகோடி மக்களைப்பெற்ற இந்தியாவும் பாகிஸ்தானும் , மிலியன் கணக்கான ரூபாய்களை தத்தம் நாட்டின் பாதுகாப்பிற்கென்று செலவு செய்வதைக்கண்டு உலகநாடுகளில் சில உள்ளுக்குள் நகைத்து கொண்டிருக்கின்றன.
காலனி ஆதிக்க காலத்தில் கூட, நாமே எல்லாவற்றையும் சுரண்டி எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது, இப்பொழுது அவர்களே யுத்த தளவாடங்கள், போர் விமானங்கள் வேண்டும் என்று நாட்டுமக்களின் வயிற்றில் அடித்து சுரண்டி, வழிய கொண்டு வந்து கொட்டுகிறார்கள் என்று மேற்கத்திய நாடுகள் சந்தோசத்தில் இருக்கின்றன. ஐந்தாறு தலைமுறைக்கு முன்பிருந்த பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத் தலைவர்களின் பிரித்தாழும் சூழ்ச்சியினால் துண்டாகிப்போன இந்தியதுணைக்கண்டம், தான் இழந்த சோபிதத்தை மீண்டும் அடையும் நாள் வாராதோ ?. ஒன்றாய் இருந்தால் உயர்வடைந்து விடுவார்கள், துண்டு துண்டாய் இருந்தால் நீயா ? நானா ? என்று காலமேல்லாம் அடித்துக்கொண்டே, வாழ்ந்து ஒழிவார்கள், என்ற வெள்ளையரின் தொலை நோக்கு பார்வையை நம்மாலும் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை.
நம்மில் பெரும்பாலோருக்கு அடிப்படை தேவைகளே நிறைவடையவில்லை அதனால் தானோ என்னவோ, காசு பணம் சேர்ப்பது என்பதற்கு மேல் இன்னும் சிந்திக்க தோணவில்லை. இன்னும் வெள்ளைக்காரன் சுவைத்து, துப்பிய டெக்னாலஜிகளை , கழுவி துடைத்து உபயோகிக்கிறோம். நம்முடைய அந்த குணம் தான், மேற்கத்தியற்கு புதியன கண்டுபிடிப்பதற்கு உந்து சக்தியாக இருக்கும் போலிருக்கிறது. போகட்டும் விசயத்திற்கு வருவோம்.
மேற்கத்திய ஆய்வாளர் ஒருவர் இந்தியாவையும் பாகிஸ்தானையும் நமக்கெல்லாம் தோன்றாத ஒரு கோணத்தில் பார்த்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் உருவான இரு நாடுகளில் ஒன்று மாறி மாறி சர்வாதிக்கார நாடாகவும், மற்றொன்று முழுக்க முழுக்க ஜனநாயக நாடாகவும் இருப்பதன் மர்மம் என்னவென்று.
அடடே நமக்குக்கூட இப்படி யோசனை வரவில்லையே என்று சிந்திக்கிறீர்களா?. போகட்டும் விடுங்கள் அவர் என்ன சொன்னாரென்று பார்ப்போம்.
இ ந்தியாவில்,பிரிட்டிஷ் அரசியலில் மற்றும் இராணுவத்தில் இருந்தவர்கள்தான் விடுதலைக்கு பிறகும், இரு நாடுகளிலும் ராணுவ மற்றும் அரசியல் பொறுப்பிற்கு வந்தார்கள்.
பெரிய பிரிட்டிஷ் ராஜ்யத்தில் கொடுத்துக்கொண்டிருந்த அளவு, ஏழ்மை நிலையில் இருந்த அன்றைய இளம் இந்தியாவில், ராணுவத்தினருக்கு சம்பளம் கொடுக்க முடியாது என்று அது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அன்றைய பிரதமர் நேரு, ராணுவ தளபதி பீல்ட் மார்சல் கரியப்பாவை சந்திக்க செல்கிறார். அவர் அறையில் இருந்த மூன்றடுக்கு கேபினட்டு ஒன்றை பார்த்து, அதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறார். அதற்கவர் முதல் அடுக்கில் கப்பல் படை தலைவர்களின் ரகசிய பைல் என்றும், இரண்டாவதில் விமானப்படை தலைவர்களின் ரகசிய பையில்கல் இருப்பதாகவும் சொல்லி முடிக்கிறார்.
மூன்றாவது அடுக்கில் என்ன இருக்கிறது என்று சொல்லாமலேயே விட்ட தளபதியிடம், பிரதமர் அதில் என்ன இருக்கிறது? என்று கேட்கிறார். சலனமற்ற கண்களுடன் நேரடியாக பிரதமரின் கண்களை பார்த்தவராக, " ராணுவப்புரட்சி செய்து உம்முடைய அரசை கவிழ்பதற்கான திட்டங்கள் அடங்கிய கோப்புக்கள் " என்று சொல்கிறார். நிர்சலனமின்றி சிரிக்காமல் சொன்ன தளபதியின் வார்த்தைகளை உள்ளுர நடு, நடுங்கியவராய் நேரு சிரித்துக்கொண்டே, கேட்டுக்கொண்டு வந்து விட்டதாக என்று ஆய்வாளர் எழுதுகிறார். பின்னாளில் பீல்ட் மார்ஷல் கரியப்பா ரிடையர் ஆகி இரண்டாண்டுகளுக்கு பிறகு, பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்படுத்தி தளபதி அயூப்கான் அதிபர் ஆனபோது, தன முன்னால் நண்பரான அவரை மிகவும் புகழ்ந்து பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்து இருக்கிறார். அன்றிலிருந்து நேரு தொடங்கி, பின்பு வந்த தலைவர்கள் எல்லாம் மிகுந்த தொலைநோக்குடன் செயல்பட்டு, ராணுவ அதிகாரங்களை ஓரிடத்தில் குவியவிடாமல், ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத அதிகாரவட்டங்களை உருவாக்கி, ஆட்சிக்கும் ராணுவத்திற்கும் இடையில் இடைவெளி உருவாக்கி விட்டதாக சொல்கிறார்.
பாக்கிஸ்தானில் ராணுவ புரட்சிக்குப்பிறகு அதிபராக வந்த ஜெனரல் அய்யூப் கானின் ஆட்சி மக்கள் நலம் ஒன்றே குறிக்கோளான நல்லாட்சியாய் அமைந்ததால் மக்களுக்கு இயற்கையாகவே ராணுவத்தைபற்றி ஒரு நல்லெண்ணம் ஏற்பட்டு விட்டது. அவருடைய ஆட்சிக்குப்பின்னால், ஒருமுறை கராச்சியில் பெரிய கலவரம் ஏற்பட்டு, போலீசால் அடக்கமுடியாமல் போய் ராணுவம் அழைக்கப்பட்டு, கலவரம் ஓய்கிறது, அரசு உடனடியாக ராணுவம் வாபஸ் ஆக வேண்டும் என்று சொல்லும்போது, ராணுவ தளபதி இருநாட்கள் அவகாசம் தாருங்கள் என்று கேட்டு, அந்த இருநாட்களில் கலவரம் காரணமாக சேதமடைந்த கட்டிடங்களையும், வெகு காலமாய் பராமரிக்கப்படாமல் கிடந்த பழைய கட்டிடங்களையும் செப்பனிட்டு, புதுப்பித்து, நகரையே பொழிவிளங்க செய்து அரசிடம் ஒப்படைத்து ராணுவம் திரும்புகிறது. இவ்வாறான செயல்பாடுகள் மக்களுக்கு ராணுவத்தின் மீது மிகுந்த நல்லெண்ணத்தை உருவாக்கி விட்டதாகவும். சிவில் அரசைவிட, ராணுவ அரசையே மக்கள் விரும்பி வரவேற்பதாக தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment
தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........