Saturday, December 5, 2015

எத்துனை காலம் தான் இப்படியே இருக்கப்போகிறதோ

இன்றைக்கு இந்தியர்களுக்கு கிடைத்திறுக்கிற வலைத்தள வசதிகள், வரப்பிரசாதமா ? அல்லது சாபமா ? என்று தலையை பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு நம்மை பலவகை குழப்பங்களுக்கு ஆளாக்கும் விசயங்கள் வலம்  வந்து கொண்டிருக்கிறது.  பலர் பலவிசயங்களை ஆதார பூர்வமாக எழுதினாலும்,  அவைகளை சீர் தூக்கி பார்க்காமல் கண்மூடித்தனமாக ஒட்டு மொத்தமாக ஒதுக்கித்தள்ளும் தன்மை விவரமறிந்தவர்களாக கருதப்படுகிற, படித்தவர்களிடத்திலும் இருப்பதை  பார்க்கும் போது என்ன  சொல்வது என்றே சொல்லத்தெரியவில்லை.

சுதந்திர போராட்ட காலம் தொட்டே,  சுய நலம் கருதி ஒருவருக்கொருவர், ஒருசாராருக்கு மறுசாரார் செய்த செயல்களின், இருட்டிக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் ஆதாரங்களுடன் வெளிவரும்போது,  ஊழலும் வஞ்சகமும் இந்த நாட்டின் பிறப்பிலேயே உருவாகி  விட்டதோ என்ற எண்ணத்தை  உருவாக்கு கிறது.


பழம் தின்று கொட்டை போட்ட பழம்பெரும், வயதான தலைவர்கள் பலரிருக்க காங்கிரசின் தலைமை பொறுப்பேற்று நாடாண்ட திருமதி இந்திராகாந்தியை பற்றி,  எப்படி அவரால் இப்படி வரமுடிந்தது என்ற கேள்விகள் அக்கால ஊடகங்களில் வலம் வந்த போது,  பெருந்தலைகளின் பலதரப்பட்ட ரகசியங்கள் கோப்பு வடிவில் அவரிடம் இருந்ததாக செய்திகள் வந்தன.  அதே போல் தான் சிரித்தே அறியாத நரசிம்ம ராவின்  சிறுபான்மை அரசு,  ஆடாமல் அசையாமல் ஐந்தாண்டுகாலம் அரசோச்சியது பற்றியும் பேசப்பட்டது.  இப்படிபட்ட இரும்புக்கரம் கொண்டவர்கள்  மறைவிற்கு  பின்னால்,  கட்டுண்டு இருந்தவர்கள்  அவரவர்க்கு ஆதரவான அரசோ, வேண்டியவர்களோ ஆட்சிக்கு வரும்போது,  ரகசிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டு,  பிடி கழன்று விடுதலையாகி !!!  விடுகிறார்கள்.  பின்னால் அடக்கியாளும்  திறனற்றவர்கள் பதவிக்கு வரும் போது, அவர்களை பெருசுகள் ஆட்டிப்பார்க்க முனைகிறார்கள்.

இந்த பழைய விசயங்களை அசைபோட காரணமானவை, சில தளங்களில் வெளியான புதிதும் பழையதுமான தகவல்கள் தான். சில ஆண்டுகளுக்கு முன்னாள் ராஜீவ் காந்தி பெயரில் இருந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி கணக்கு பற்றி ஒருவர் சாமியாடினார், அவர் வழி பற்றி இன்னும் சிலர் எழுதவும் செய்தனர். இடையில் என்ன நடந்தது ?  ஏன்  அதன் பின்பு பேச்சு மூச்சே காணோம் ?  பெட்டிகள்  கை மாறியதா ?  இல்லை  சாமியாடிகளின் குடிமி,  ராஜீவ் படுகொலை விசாரணை கமிஷன் மூலம் கிடைத்த ஆதாரம், எதிர் தரப்புக்கு கிடைத்ததா யாருக்கு தெரியும் ?.  இன்றும்  கூட ஆள்பவர்களை,   80000 கோடி  நிலக்கரி ஏல வரவு  பிளஸ்  அலைக்கற்றை ஏலவரவால், நாட்டில்  வருமான வரியையே நீக்க முடியுமே ?  என்று கோடிகாட்டி,  விரைவில்  எனக்கு பதவி தராவிட்டால் என்பது போல,  ஒரு செய்தியை குருவி சொன்னது.  இவர்கள் எல்லாம்  சேர்ந்து நம்மை வைத்து அரசியல் சதுரங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே கருப்பு பணத்தை கொண்டுவந்து, ஒவ்வொரு குடிமகனின் பெயரிலும்  ரூ 15 லட்சத்தை போடப்போவதாக,  உணர்ச்சி வசப்பட்டு சொல்லி,  ஆப்பு பிடுங்கிய குரங்காக  நொந்து நூடுல்ஸாகி போனவர்கள்,  இன்னும் என்னவெல்லாம் ட்விட்டர் குருவி கூச்சளிடுமோ என்று கவலை கொன்டிருக்கிரார்கள்.

இந்த தேசத்தில்  தினசரி வாழ்க்கையையே பெரிய இமாலய சாதனையாக செய்து கொண்டிருப்பவர்கள்,  வெள்ளந்தியாய் யார் என்ன சொன்னாலும்,  மேடையேறி மைக் பிடித்து, செயற்கையாய் குரல் உடைய, நான் உங்களுடைய வீடுகளை சந்திர மண்டலத்தில் கட்டித்தரப்போகிறேன் !!  உங்களுடைய வாழ்நாளில் யாருமே இப்படியொரு வாக்குறுதியை கொடுத்து பார்த்திருக்க மாட்டீர்கள் !!!  என்றுசொல்லும் பொது நம்பி வாக்களிக்கிறார்கள். சொல்பவர்கள்,   இதெல்லாம் எத்தனை நாட்களுக்கு இந்த முண்டங்களுக்கு நினைவிருக்க போகிறது என்று நினைத்தவர்கள், தைரியமாக ஒருபடி  மேலே போய்,  " அப்படியெல்லாம் ஒரு உணர்ச்சி பெருக்கிலே பேசுவது தான் "  என்று தெனாவெட்டாக பேசியதின் விளைவு,  பீகாரில் பேரிடியாய் தலையில் இறங்கி விட்டது.

இப்படி ஒருவர்க்கொருவர் அவரவர் செய்த கிரிமினல் காரியங்களின் ஆதாரங்களை வைத்துக்கொண்டு மிரட்டி காரியங்களை சாதித்துக்கொண்டும், கல்லாக்களை நிறைத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.   இந்த  67, 68 கால் சுதந்திர இந்தியாவில்  சுருட்டலும் சுரண்டலும் தான் சொல்லிக்கொள்ளும் அளவில் இருக்கிறதே தவிர,  மக்களின் நிலைமை சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை,  இன்னும் எத்துனை காலம் தான் இப்படியே இருக்கப்போகிறதோ தெரியவில்லை.

No comments:

Post a Comment

தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........